பாடப் புத்தகம் விரைவாக வினியோகம்: ‘இக்னோ’ துணைவேந்தர் தகவல்
பாடப் புத்தகம் விரைவாக வினியோகம்: ‘இக்னோ’ துணைவேந்தர் தகவல்
UPDATED : ஜன 23, 2009 12:00 AM
ADDED : ஜன 23, 2009 11:33 AM
மதுரை: ‘இக்னோ’ பல்கலை., மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை உரிய காலத்தில் கொண்டு சேர்க்க கூடுதல் அச்சகங்கள் ஏற்படுத்தப்படும் என துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை பேசினார்.
மதுரையில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை., (இக்னோ)யின் துணை மண்டல மையம் 2004ல் துவங்கப்பட்டது. இதில் 17 மாவட்டங்களில் 83 படிப்பு மையங்கள் மூலம் 9054 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தற்போது பசுமலை சி.எஸ்.ஐ., பள்ளி வளாகத்தில் செயல்படும் இம்மையத்திற்கென கோவில்பாப்பாக்குடி கிராமத்தில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான 0.75 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 4.9 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் கட்டடம் அமைய உள்ளது. மல்டி மீடியா மையம், கம்ப்யூட்டர் மையம், வானொலி மையம், நூலகம், கருத்தரங்கு கூடம், மின்னணு நூலகம் என நவீன வசதிகளுடன் இது அமையும்.
இப்புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனவரி 22ம் தேதி கலெக்டர் பி.சீத்தாராமன் தலைமையில் நடந்தது. விழாவில் மண்டல இயக்குனர் சண்முகம் வரவேற்றார். மத்திய பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சிதம்பரம், உதவி பதிவாளர் பாலசுப்ரமணியம் பங்கேற்றனர்.
அடிக்கல்லை திறந்து வைத்து ‘இக்னோ’ பல்கலை., துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை பேசியதாவது: ‘இக்னோ’வில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பல்கலை.,யில் மாணவர்களுக்கு படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் ஒரு மையத்தில் மட்டுமே தயாராகி பிற இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இதில் காலதாமதம் ஏற்பட்டதால், புத்தகம் அச்சிடுவதை நாடுமுழுவதும் பரவலாக செயல்படுத்த ஏற்பாடுகள் நடந்து முடிந்துள்ளது. விரைவில் அந்தந்த பகுதியிலேயே அவை அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு குறித்த காலத்திலேயே சென்று சேர்க்கப்பட்டுவிடும். மாணவர்களின் படிப்புக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
இக்னோவுக்காக இந்தியா முழுவதும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு என 5 மையங்கள் செயல்படுகின்றன. இவைதவிர 5 தொழிற் பயிற்சி மையங்களும் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் செயல்படத் துவங்கும். இக்னோவின் 25 மண்டல மையங்களுக்கு விரைவில் சொந்த கட்டடம் உருவாக்கப்பட உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், விதுர்ஷா மாவட்டத்தில் ‘யுனிசெப்’ அமைப்பின் ஒத்துழைப்புடன் இக்னோ மூலம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் வெற்றியை பொறுத்து இப்பயிற்சி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். தற்போது தொலைநிலைக் கல்வி கவுன்சில் மூலம், தொலைநிலைக் கல்வி கற்பிக்கும் பல்கலை.,கள் குறித்தும் தரஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
கல்லூரிகளுக்கு ‘நாக்’ தரச்சான்று கிடைப்பது போல தொலைநிலைக் கல்வி தரும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இதுபற்றிய விளம்பரப்படுத்திய சில நாட்களுக்குள் 25 பல்கலை.,கள் தங்களை ஆய்வுக்கு உட்படுத்த முன்வந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார். துணை இயக்குனர் நம்பூதிரிபாடு நன்றி கூறினார்.
