UPDATED : ஜன 24, 2009 12:00 AM
ADDED : ஜன 24, 2009 03:33 PM
பி.பி.ஓ., துறையில் பெருகும் வேலைவாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கல்லூரி ஆசிரியர்களுக்கு ‘நாஸ்காம்’ அமைப்பு பயிற்சியளிக்க தொடங்கியுள்ளது.
பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு உடனே பணிவாய்ப்பை வழங்குவது பி.பி.ஓ., நிறுவனங்கள் தான். எனினும் பட்டதாரிகள் பலருக்கு பி.பி.ஓ., துறையில் நுழைய தேவையான திறன்கள் இல்லாததால் வேலைவாய்ப்புகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதற்கு தீர்வாக கல்லூரி மாணவர்களை பயிற்றுவிக்கும் வகையில் கல்லூரி ஆசிரியர்களுக்கு நாஸ்காம் பயிற்சியளிக்க தொடங்கியுள்ளது. ஐ.டி., மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு தேவையான திறன்களை பெறும் வகையில் இந்த பயிற்சிகள் அமைந்துள்ளது.
ஆங்கிலத்தில் பேசுதல், கவனித்தல், உரையாடுதல், எழுதுதல், வணிக உரையாடல்கள், தொலைபேசி உரையாடல்கள், நேர்காணல், குரூப் டிஸ்கஷன், டீம் ஒர்க் தொடர்பான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். இதற்கான பாடத்திட்டத்தை ‘காக்னிசன்ட்’ என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.
ஓய்வுக்கு முன்னர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரையாவது பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்கட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர்களுக்கு இது போன்ற பயிற்சிகளை வழங்குவதால், அவர்களால் மாணவர்களின் திறன்களை அதிகரிக்க முடியும். மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு இது உதவும். மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களுக்கு அதற்குரிய ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
