பிளஸ் 2 செய்முறை தேர்வு துவங்குவதில் தாமதம்: மாணவர்கள் ஏமாற்றம்
பிளஸ் 2 செய்முறை தேர்வு துவங்குவதில் தாமதம்: மாணவர்கள் ஏமாற்றம்
UPDATED : ஜன 25, 2009 12:00 AM
ADDED : ஜன 25, 2009 10:33 AM
இதனால், எழுத்துத் தேர்வுக்கான அவகாசம் குறையும் என்பதால், மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ல் துவங்குவதற்கான அறிவிப்பு கடந்த டிச., 26ல் வெளியானது. செய்முறை தேர்வு தேதி முதன்மை கல்வி அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்படும் என அப்போது தேர்வுத்துறை கூறியது.
பொதுவாக செய்முறை தேர்வுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கும். வரும் பிப்., 2ல் செய்முறை தேர்வுகள் துவங்குவதாக பல பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சென்னையில் பிப்., 2ல் செய்முறை தேர்வு துவங்குவதாக முதன்மை கல்வி அதிகாரி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தேதி மாற்றம்: செய்முறை தேர்வுக்கு முன்னதாக மாணவர்களின் தேர்வு எண் பட்டியல், ஹால் டிக்கெட்கள் பள்ளிகளுக்கு சென்றடைய வேண்டும். பல பள்ளிகளில் இப்பட்டியல் பட்டுவாடா செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிப்., 2ல் துவங்குவதாக இருந்த செய்முறை தேர்வு தேதியை மாற்ற மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பிப்., 2க்கு பதிலாக சில மாவட்டங்களில் பிப்., 9ம், சில மாவட்டங்களில் பிப்., 16ம் தேர்வு துவங்க உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது.
மாணவர்கள் ஏமாற்றம்: பிப்., 2ல் துவங்கி பிப்., 15க்குள் செய்முறை தேர்வுகள் முடியும் என்ற மனநிலையில் மாணவர்கள் இருந்தனர். தற்போது பிப்., 16ல் துவங்கி 25ம் தேதி தேர்வுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே எழுத்து தேர்வுக்கு தயாராவதற்கு போதிய அவகாசம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
