ஒரு சதவீதம் கூட தேர்ச்சி பெறாத ‘சிறப்பு’ பள்ளிகள்!
ஒரு சதவீதம் கூட தேர்ச்சி பெறாத ‘சிறப்பு’ பள்ளிகள்!
UPDATED : ஜன 27, 2009 12:00 AM
ADDED : ஜன 27, 2009 10:59 AM
இந்த சிறப்பு பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், விடுதிப் பணியாளர்களான ஆயா, சமையலர், இரவு காவலர்கள் என பெரும்பாலான பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
அதிக பணியிடங்களில் குறைந்தளவு ஆசிரியர்கள் பணிபுரிவதால், கல்வித் தரம் கடுமையாகப் பாதிக்கிறது. அரசு விதிகளின்படி, இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் இருக்க வேண்டும். தனிப்பட்ட சலுகை, கருணை அடிப்படையை தவிர்க்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு இருப்பதில்லை.
பணியில் உள்ள தலைமையாசிரியர்களின் பொறுப்பற்ற தன்மையும் கல்வித் தரத்தை பாதிக்கிறது. தலைமையாசிரியர்கள், பள்ளிகளில் இருப்பதில்லை. வருகைப் பதிவேடு முதல் சம்பளப் பட்டுவாடா வரை வீடு தேடி எடுத்துச் செல்லப்படுகிறது. கூடுதல் தலைமையாசிரியர்கள் நிர்வகிப்பதால் பள்ளியில் பிரிவினை ஏற்படுகிறது.
தனியார் பள்ளிகளில் நடக்கும் தலைமையாசிரியர் ஆய்வு சிறப்புப் பள்ளிகளில் நடப்பதில்லை. மாணவர் நலம், பெற்றோர் - ஆசிரியர் கூட்டம், பாடத்திட்டம் மற்றும் ஆய்வு உள்ளிட்ட கல்வி சார்ந்த கூட்டங்கள், மாதம் ஒரு முறை கூட நடப்பதில்லை. கல்வித் துறையில் மூத்த ஆசிரியர்களே ஆய்வாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
சிறப்புப் பள்ளிகளில் இந்நிலை இல்லை. ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் பரிசோதிக்கும் நபர்களிடமே ஆலோசனை பெற்று, தேதி நிர்ணயித்து, குறிப்பு எடுத்துக் கொண்டு ஆய்வு செய்வதால், பிரச்னைகள் மூடி மறைக்கப்பட்டு, எந்தவித மேம்பாடும் நடைபெறுவதில்லை.
ஒன்றாவது முதல் எட்டாவது வரை கால அட்டவணை, பாடத்திட்டப்படி கல்வி கற்பிக்கப்படுகிறதா என்பதைக் கவனிக்க, அரசுப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளது போல், சிறப்புப் பள்ளிகளிலும் நியமிக்க வேண்டும். சிறப்புப் பள்ளிகளில் தன்னிச்சையான போக்கு, ஒழுங்கான மூப்பு பட்டியல் இல்லாதது, நிலையான கல்வி கற்பதில் முரண்பாடு, கால தாமதமான மாணவர் சேர்க்கை என கல்வித் தரம், மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.
காது கேளாதோருக்கான உயர்நிலைப்பள்ளிகளில் 166 ஆசிரியர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 117 ஆசிரியர்கள் தான் பணியில் உள்ளனர். பொதுத்தேர்வில், மூன்று சிறப்புப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. தஞ்சை பள்ளியில் ஒருவரும், காஞ்சிபுரத்தில் இருவரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
அதிரடி மாற்றம் வருமா?
அரசு மற்றும் அரசு சாரா சிறப்புப் பள்ளிகளை நிர்வகிக்க தகுதி வாய்ந்த உதவி இயக்குனரை நியமிக்க வேண்டும். அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டும். தலைமையாசிரியர் உட்பட அனைவரும் உரிய கால அட்டவணைப்படி பாடங்களை நடத்த வேண்டும். பள்ளிக்கு அருகிலேயே தலைமையாசிரியர் வசிக்க வேண்டும்.
சிறப்புப் பள்ளிகளில், கல்வித்துறை சார்ந்த மாவட்ட அலுவலகம் மூலமாக வழங்கப்படும் வினாத்தாள்கள் வழியாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். எட்டாம் வகுப்பை கட்டாயமாக பொதுத்தேர்வு கல்வித்துறை மூலம் நடத்த வேண்டும்.
ஆறாம் வகுப்பு முதல் மதிப்பெண் பட்டியல் கட்டாய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, கல்வி மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தகுதி வாய்ந்த ஆய்வாளர்களை நியமித்து ஆரம்பப்பள்ளி, நடுநிலை, மேனிலை, உயர்நிலைப்பள்ளிகள் என தரம் பிரித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
வகுப்புகளில் இறை வணக்கம், பள்ளி மற்றும் விடுதிகளில் தொலைபேசி பயன்படுத்துவதில் உள்ள முறைகேடு, விடுதி உணவு, நன்கொடைப் பொருட்கள் குறித்த ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முறையாக ஆய்வு செய்தால் தான் சிறப்பு பள்ளிகளுக்கு விடிவு ஏற்படும்; கல்வித் தரம் உயரும்.
ஏதோ ஓர் உடற்குறைபாட்டால், கல்வியை பிரதானமாக எண்ணி படிக்க வந்துள்ளவர்கள் குறித்து அரசு அக்கறை எடுத்தால் தான், ஊனமுற்றிருக்கும் சிறப்புப் பள்ளிகளின் கல்வித் தரம் உயரும்.
