நூல் ஆசிரியர்களிடம் குறையும் அரசு விருது பெறும் ஆர்வம்!
நூல் ஆசிரியர்களிடம் குறையும் அரசு விருது பெறும் ஆர்வம்!
UPDATED : ஜன 27, 2009 12:00 AM
ADDED : ஜன 27, 2009 12:25 PM
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆண்டுதோறும் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கென தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு வெளியிட்டு, பரிசுக்காக நூல்களை அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கும். அதன் அடிப்படையில், நூல் ஆசிரியர்கள், போட்டிக்குரிய நூலின் ஐந்து பிரதிகளை அனுப்ப வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை வகைப் படுத்தியுள்ளவாறு கவிதை, வரலாறு, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட 31 தலைப்புகளில், நூல்கள் பெறப்படுகின்றன.
இவ்வாறு வரப்பெற்ற நூல்கள் கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட திறனாய்வாளர் களுக்கு அனுப்பப்படுகின்றன. உதாரணமாக, கவிதை தொடர்பான நூல் போட்டிக்கு வருமானால், அந்நூல், ஐந்து பிரபல கவிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அவற்றைப் படித்து, மதிப்பெண் அளித்து, தமிழ் வளர்ச்சித் துறைக்கு அனுப்பி வைப்பர்.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர், முன்னாள் துணைவேந்தர்கள் அறவாணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் முன்னிலையில், இந்த மதிப்பீடுகள் சரிபார்க்கப்பட்டு, அதிக மதிப்பெண் பெற்ற நூல், பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்படும். கடந்த 2007ம் ஆண்டுக்கான சிறந்த நூல் தேர்வுக்காக, கடந்த ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியானது. மொத்தம் 545 நூல்கள் தேர்வுக்காக வந்தன.
இதில், பரிசுக்குரிய நூல்கள் தேர்வு செய்யப்பட்டு, நூல் ஆசிரியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், பதிப்பகத்தாருக்கு 5,000 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. முதல்வர் தலைமையில் நடந்த விழாவில் மொத்தம் ஆறு லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தமிழகத்தில், ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள், லட்சக்கணக்கான நூல் ஆசிரியர்கள் இருந்தும், பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் மற்றும் இதழியல் தகவல் தொடர்பு தொடர்பான தலைப்புகளில், ஒரு நூல் கூட தேர்வுக்காக வரவில்லை.
அதே போல், கணினியியல், விளையாட்டு, வெளிநாட்டு தமிழ் படைப்பிலக்கியம் ஆகிய மூன்று தலைப்புகளில், ஒரே ஒரு நூல் மட்டுமே தேர்வுக்காக வந்துள்ளன. ஒரே ஒரு நூல் தேர்வுக்கு வருமானால், அதைப் போட்டியில் சேர்க்க இயலாது என்பதால், இந்த மூன்று துறைகளில் இருந்து ஒரு நூல் கூட பரிசுக்கு, தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
வறுமையோடு ஒட்டிப் பிறந்த ஏராளமான எழுத்தாளர்கள், நூல் ஆசிரியர்கள் தமிழகத்தில் இருக்கும் நிலையில், அரசின் பரிசு வேண்டி குறிப்பிட்ட துறைகளில், ஒரு நூல் கூட வரவில்லை என்பது வேதனையளிப்பதாக உள்ளது. வளர்ந்துவரும் கம்ப்யூட்டர் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் ஒரே ஒரு நூல் மட்டுமே போட்டிக்கு வந்துள்ளதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர்கள், பதிப்பகத்தாரை ஊக்குவிக்க வேண்டும்; அதிக நூல்கள் வெளியாக வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு இத்தகைய பரிசை அளித்து கவுரப்படுத்தி வருகிறது. இதன் நோக்கம், பாழ்படாத வண்ணம் இந்த ஆண்டாவது அனைத்து எழுத்தாளர்களுக்கும், இந்தத் திட்டம் குறித்த தகவல் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.
