திருக்குறளை ராகத்துடன் பாடி, நடனமாடி காட்டும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்
திருக்குறளை ராகத்துடன் பாடி, நடனமாடி காட்டும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்
UPDATED : ஆக 19, 2014 12:00 AM
ADDED : ஆக 19, 2014 11:29 AM
விருதுநகர்: விருதுநகரில் பள்ளி மாணவர்களிடையே திருக்குறளை ராகத்துடன் பாடி, நடனமாடி அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கினார்.
ஈரோடு மாவட்டம் தரகம்பட்டி ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமகாலிங்கம். பள்ளி மாணவர்களிடையே திருக்குறள் எப்படி படிக்க வேண்டும் என்பதை இசை, நடனத்துடன் விளக்கி வருகிறார். நேற்று விருதுநகர், சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி வந்த இவர், மாணவர்களிடையே பேசினார்.
அப்போது, திருக்குறளில் உள்ள ஏழு சீர்களை, ஏழு ஸ்வரங்களாக உருவாக்கி தாளத்தின் அடிப்படையில் விளக்கினார். அதேபோல், ஒரு குறளை இசையுடன் பாடலாக அமைத்து, அதற்கு பரதம், வெஸ்டன், நாட்டுப்புற கலையாக, மூன்று வடிவத்தில் பாடி, நடனமாடி மாணவர்களை கவர்ந்தார். இலக்கணங்களை திருக்குறளில் எளிதாக எடுத்துக்காட்டி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
சுந்தரமகாலிங்கம் கூறுகையில், "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். நாம் கற்ற கல்வியை மாணவர்களுக்கு எளிதாக புரிய வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் பாடல்தான். திருக்குறளை ராகத்துடன் பாடி நடித்து காட்டினால் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வர். இதில் எண்ணற்ற வாழ்வியல் கருத்துக்கள் அதிகம் உள்ளன. செய்யுளில் சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து, பிரிக்க வேண்டியவற்றை பிரித்து பாடி காட்டினாலே போதும், எளிதில் விளங்கி விடும்" என்றார்.
