ஜாதி சான்றிதழ் கேட்டு மாணவர்களுடன் அவர்களது பெற்றோர் ஆட்சியரிடம் மனு
ஜாதி சான்றிதழ் கேட்டு மாணவர்களுடன் அவர்களது பெற்றோர் ஆட்சியரிடம் மனு
UPDATED : ஆக 19, 2014 12:00 AM
ADDED : ஆக 19, 2014 11:51 AM
திருவள்ளூர்: ஜாதி சான்றிதழ் கேட்டு, பள்ளிகளில் முட்டி போட வைப்பதாக, மாணவர்களுடன் அவர்களது பெற்றோர், திருவள்ளூர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கூவம், கொரக்கம்பேடு திடீர் நகர், ராலபாடி, உளுந்தை மற்றும் சத்தரை ஆகிய கிராமங்களில் இருந்து, இருளர் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், தங்களது பெற்றோருடன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் சாதி சான்றிதழ் கேட்டு மனு அளித்தனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், "ஜாதி சான்றிதழ் கேட்டு, கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். ஆனால், வருவாய் துறையினர் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். ஜாதி சான்றிதழ் கேட்டு, பள்ளிகளில் மாணவர்களை முட்டி போட வைக்கின்றனர்.
மேலும், கல்வி உதவித்தொகை, மேல்நிலை கல்வியில் அரசு வழங்கும் சலுகைகள் பெற, ஜாதி சான்றிதழ் முக்கியமாகும். எனவே, உடனடியாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்" என்றனர்.
