பள்ளி வளாகத்தின் நடுவில் செல்லும் மின் இணைப்பு உடனடியாக சீரமைக்கப்படுமா?
பள்ளி வளாகத்தின் நடுவில் செல்லும் மின் இணைப்பு உடனடியாக சீரமைக்கப்படுமா?
UPDATED : ஆக 20, 2014 12:00 AM
ADDED : ஆக 20, 2014 11:02 AM
ஆவடி: பாலவேடு கிராமத்தில் பள்ளி வளாகத்தின் நடுவில் செல்லும் மின் இணைப்பை, விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவடி பட்டாபிராம் அடுத்த பாலவேடு கிராமத்தில், அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. அங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். பள்ளியின் மைய பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து, பள்ளி மைதானத்தின் இடையே எதிர் திசையில் உள்ள மின் கம்பத்திற்கு செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக தொங்குகின்றன.
பலத்த காற்றடித்தால், அவை அறுந்து விழும் அபாயம் நிலவுகிறது. உடற்கல்வி வகுப்பின்போது, மைதானத்தில் விளையாடும் மாணவ, மாணவியர் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டது.
பள்ளிக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், இணைப்பை மாற்றி அமைக்க கணிசமான தொகை செலவாகும் என கூறி, தாழ்வான மின் இணைப்பை, சரிசெய்யாமல் சென்று விட்டனர். மாணவர்களின் நலன் கருதி, தாழ்வாக தொங்கும் மின் இணைப்பை சரிசெய்ய, மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
