UPDATED : ஆக 20, 2014 12:00 AM
ADDED : ஆக 20, 2014 10:58 AM
திருப்பூர்: திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான கபடியில், அரசு பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.
திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான மாணவர் கபடி போட்டி கே.எஸ்.சி. பள்ளியில் நடந்தது. போட்டியை மாவட்ட கபடி கழக செயலாளர் சண்முகம் துவக்கி வைத்தார்.
14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 14 பள்ளிகள் பங்கேற்றன. அரையிறுதி ஆட்டமொன்றில் கருப்பகவுண்டம்பாளையம் அரசு பள்ளி அணி, சுபாஷ் மெட்ரிக் பள்ளியை 32-17 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் எம்.என்.சி.சி. மெட்ரிக் அணியை, கே.எஸ்.சி. பள்ளி அணி 29-11 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இறுதி போட்டியில் கருப்பகவுண்டம்பாளையம் அரசு பள்ளியை, கே.எஸ்.சி. பள்ளி அணி 24-18 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது.
17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 11 பள்ளிகள் பங்கேற்றன. அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்ற முதலிபாளையம் அரசு பள்ளி அணியும், கே.எஸ்.சி. அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் கே.எஸ்.சி. அணியினர் 29-26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றனர்.
19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஆறு பள்ளிகள் பங்கேற்றன. அரையிறுதி ஆட்டங்களில் கே.எஸ்.சி. அணியை விஜயாபுரம் அரசு பள்ளியும்; ராமகிருஷ்ணா வித்யாலயா அணியை விவேகானந்தா வித்யாலயா அணியும் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தன. இறுதி போட்டியில், விவேகானந்தா வித்யாலயா அணியை 33-17 என்ற புள்ளிக் கணக்கில், விஜயாபுரம் அரசு பள்ளி அணி வீழ்த்தி வெற்றிவாகை சூடியது.
