சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு - தமிழகத்தில் 84 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு - தமிழகத்தில் 84 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
UPDATED : ஆக 22, 2014 12:00 AM
ADDED : ஆக 22, 2014 12:20 PM
சென்னை: வரும் 24ம் தேதி நடக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை, தமிழகத்தில் 84 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
9,000 பேர்: நாடு முழுவதும், வரும் 24ம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று நகரங்களில் தேர்வு நடக்கிறது. மூன்று மையங்களிலும் சேர்த்து, 84 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். சென்னையில், 60,003 பேர்; கோவையில் 15 ஆயிரம் பேர்; மதுரை யில் 9,000 பேர் எழுதுகின்றனர்.
இணையதளத்தில்...:
சென்னை மையத்தில் நடக்கும் தேர்வு குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு: பார்வைத்திறன் குறைபாடு உள்ள தேர்வர்கள் 309 பேர். இவர்களுக்கென, கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில், அதிக தேர்வர்கள் பங்கேற்ப தால் தேர்வு மையங்களை, தேர்வர்கள், எளிதில் கண்டு கொள்வதற்கு வசதியாக சென்னை, சென்ட்ரல், கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் தாம்பரத்தில் இருந்து, தேர்வு மையங்களை அடைவதற்கான பஸ் வழித்தடம் குறித்த தகவல், www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.
மின்னணு சாதனங்களுக்கு தடை: வரும் 24ம் தேதி காலை 9:30 மணி முதல், 11:30 மணி வரை, முதல் தாள் தேர்வு (அப்ஜக்டிவ் டைப்) நடக்கும். பின் பிற்பகல், 2:30 மணி முதல் 4:30 மணி வரை, இரண்டாம் தாள் தேர்வு (அப்ஜக்டிவ் டைப்) நடக்கும். பை, மொபைல்போன் உட்பட, வேறு எந்தவிதமான நவீன மின்னணு சாதனங்களும், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாது. தேர்வு மைய நுழைவாயிலில், போலீசார், தேர்வரை பரிசோதித்த பின், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
இரண்டாம் தாளில், எட்டு ஆங்கில கேள்விகள், கடினமாக இருந்ததால், அவற்றை நீக்கக்கோரி, டில்லியில் போராட்டம் நடந்தது. இதையடுத்து, அந்த கேள்விகளுக்கான மதிப்பெண், கணக்கில் கொள்ளப்படாது என மத்திய அரசு அறிவித்தது.
இருப்பினும், கேள்வித்தாள் அச்சிடப்பட்டு விட்டதால், வழக்கம்போல் தேர்வு நடத்தப்பட உள்ளது. தலா 2.5 மதிப்பெண் வீதம், எட்டு கேள்விகளுக்கு 20 மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது. இது குறித்த விவரம், தேர்வு மையங்களில் விளக்கப்படும் என தெரிகிறது.
