கோவையில் முதல்முறையாக நடந்த யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வு
கோவையில் முதல்முறையாக நடந்த யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வு
UPDATED : ஆக 25, 2014 12:00 AM
ADDED : ஆக 25, 2014 01:19 PM
கோவை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி) கோவையில் முதல்முறையாக நேற்று நடத்திய சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில், கோவை மண்டல மாணவர்கள் மற்றும் கேரளா, கர்நாடக மாநில மாணவர்கள் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு, கோவையில் மையம் இல்லாமலிருந்தது. இங்குள்ள மாணவர்கள் சென்னை அல்லது மதுரைக்கு செல்ல வேண்டியதிருந்தது. கல்வியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை அனுப்பியதால், இந்தாண்டு முதல் கோவையில் தனி மையம் ஒதுக்கி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டது.
இதன்படி, முதல் தேர்வு நேற்று கோவையில் 22 மையங்களில் நடந்தது. கோவை மாநகராட்சி எல்லைக்குள் 21 மையங்களிலும், புறநகர் பகுதியில் ஒரு மையத்திலும் தேர்வு நடந்தது. 10 ஆயிரத்து 345 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 4,148 பேர் (41 சதவீதம்) மட்டுமே தேர்வு எழுதினர். 6,192 பேர் (59 சதவீதம்) தேர்வு எழுதவில்லை.
அரசு கலைக் கல்லுாரியை சேர்ந்த இலவச சிவில் சர்வீசஸ் பயிற்சியாளர் பேராசியர் கனகராஜ் கூறியதாவது: கோவைக்கு கிடைத்துள்ள மையம், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் சேலம், நீலகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கும், கேரளாவின் கிழக்கு மாவட்டங்களான பாலக்காடு, மலப்புரம், வயநாடு, திருச்சூர் மாணவர்களுக்கும், கர்நாடகாவின் தெற்கு மாவட்ட மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
அதிக கல்வி நிறுவனங்கள் கொண்ட கோவையை சேர்ந்த மாணவர்கள் பலர், கடந்த காலங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தமிழக அளவில் இரண்டாமிடம் பிடித்த டாக்டர் கார்த்திகேயன், கோவை அருகே உள்ள கோபியை சேர்ந்தவர். மத்திய தேர்வாணையத்துக்கும் கோவையில் தேர்வு நடத்துவது எளிதானது.
கோவைக்கும் டில்லிக்கும் தினமும் விமானம், ரயில் சேவைகள் உள்ளதால், மூன்று மணி நேரத்தில் கேள்வித்தாள்கள், அதிகாரிகள், பயிற்றுனர்களை அனுப்பி வைக்கவும், திரும்ப பெற்றுக் கொள்ளவும் வசதி உள்ளது. கேரளாவின் கிழக்கு மாவட்ட மாணவர்கள் திருவனந்தபுரத்துக்கும், கோவை பகுதி மாணவர்கள், சென்னை, பெங்களூரு அல்லது மதுரைக்கும், கர்நாடகாவின் தெற்கு மாவட்ட மாணவர்கள் பெங்களூருவுக்கும் செல்வதால் ஏற்படும் பொருட் செலவு, பயண நேரம், களைப்பு இனி இருக்காது. இதனால் தேர்வுக்கு நன்கு தயாராக முடியும். இவ்வாறு, கனகராஜ் கூறினார்.
