UPDATED : ஆக 27, 2014 12:00 AM
ADDED : ஆக 27, 2014 11:29 AM
கோவை: டி.சி.எஸ்., நிறுவனம் ஆண்டுதோறும் ஐ.டி., புதிர் போட்டியினை நாடுமுழுவதும் பள்ளிகளுக்கிடையே நடத்தி வருகிறது.
நடப்பாண்டிற்கான போட்டி துவங்கிய நிலையில், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிக்கிடையேயான போட்டி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடந்தது. இதில் 72 பள்ளிகளைச் சேர்ந்த எட்டு முதல் பிளஸ்2 வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் பிரபல குவிஸ் மாஸ்டர் கிரி போட்டியை தொகுத்து வழங்கினார்.
எழுத்துப்பூர்வமான ஆரம்ப சுற்றில் பங்கேற்ற 479 அணிகளில், ஆறு அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து நடந்த பிராந்திய இறுதிப்போட்டியில், கோத்தகிரி, செண்ட் ஜூடஸ் பப்ளிக் பள்ளி மாணவர்களான ஆசிக் ரேஜி, அஸ்வின் பிலிப் ஆகியோர் சேம்பியன்ஷிப் பெற்று அசத்தினர். இரண்டாமிடத்தை கோவை, பாப்பநாயக்கன்பாளையம் ஜி.கே.டி மெட்ரிக் பள்ளி மாணவர்களான சரத் சந்தர், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் தட்டிச் சென்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சென்னை, டி.சி.எஸ்., வளர்ச்சிச் சந்தைப் பிரிவு தலைவர் விஸ்வநாதன் பரிசுகள் வழங்கினார். சேம்பியன்ஷிப் பெற்ற கோத்தகிரி மாணவர்கள் வரும் டிசம்பர் மாதம் மும்பையில் நடக்கும் இறுதிப் போட்டியில், 14 அணிகளுடன் போட்டியிட உள்ளனர்.
