பள்ளி பராமரிப்பு நிதி ஆய்வுசெய்யும் உத்தரவால் தலைமையாசிரியர்கள் கலக்கம்
பள்ளி பராமரிப்பு நிதி ஆய்வுசெய்யும் உத்தரவால் தலைமையாசிரியர்கள் கலக்கம்
UPDATED : ஆக 27, 2014 12:00 AM
ADDED : ஆக 27, 2014 12:43 PM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ., சார்பில், வழங்கிய பள்ளி பராமரிப்பு நிதி குறித்து, ஆய்வுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால், தலைமை ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
மாவட்ட அளவில், 12 ஒன்றியங்களில் 1,314 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ப பள்ளி பராமரிப்பு மானிய நிதி வழங்கப்படுகிறது. பள்ளி மேலாண்மை குழு தீர்மானத்தின்படி, நிதி செலவிடுதல், இவற்றை வட்டார மேற்பார்வையாளர், கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.
நடப்பு கல்வியாண்டுக்கு ரூ.ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தேவையான டேபிள், சேர் உள்ளிட்ட தளவாட சாமான்கள் வாங்கியது போக, எஞ்சிய தொகையில் முக்கியமாக இல்லாத இடங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டி ஏற்படுத்துதல், பழைய தொட்டிகளை சீரமைத்தல் அவசியம் என, தலைமை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் சி.இ.ஓ., வசந்தி தெரிவித்திருந்தார்.
ஆசிரியர் பயிற்றுநர், வட்டார மேற்பார்வையாளர், கல்விஅலுவலர்கள் அடங்கிய குழுவினர் பராமரிப்பு மானிய நிதியில் செலவினங்கள் குறித்து முறையாக ஆய்வுசெய்து அறிக்கை சமர்பிக்குமாறு கூறியுள்ளார். நிதியை முறையாக செலவிடாத தலைமை ஆசிரியர்கள் குறித்தும் தகவல் சேகரிக்ககப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமை ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
