டென்னிஸ் இறுதி போட்டியில், லயோலா, செயின்ட் மைக்கேல்ஸ் கல்லுாரி மாணவர்கள்!
டென்னிஸ் இறுதி போட்டியில், லயோலா, செயின்ட் மைக்கேல்ஸ் கல்லுாரி மாணவர்கள்!
UPDATED : ஆக 27, 2014 12:00 AM
ADDED : ஆக 27, 2014 12:51 PM
நுங்கம்பாக்கம்: தென்மண்டல அளவிலான டென்னிஸ் இறுதி போட்டியில், லயோலா, செயின்ட் மைக்கேல்ஸ் கல்லுாரி மாணவர்கள் மோதுகின்றனர்.
லயோலா கல்லுாரி சார்பில், தென்மண்டல அளவிலான, பெர்ட்ராம் விளையாட்டு போட்டிகள், நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடந்து வருகின்றன. இதில், 24 பள்ளி அணிகள், 99 கல்லுாரி அணிகள் என, மொத்தம் 123 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
டென்னிஸ் அரையிறுதி போட்டியில், செயின்ட் மைக்கேல்ஸ் கல்லுாரி மாணவர் அபினவ் சஞ்ஜீவ், செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லுாரி மாணவர் அகில் கனகராஜ் ஆகியோர் மோதினர். அபினவ் சஞ்ஜீவ், 6-0 என்ற செட் கணக்கில் அகிலை வீழ்த்தி, முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில், சுதாரித்து விளையாடிய அகில், 4-6 என்ற செட் கணக்கில் அபினவை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில், அபினவ் 6-3 என்ற செட் கணக்கில், அகிலை வென்றார். மொத்தத்தில் அபினவ், 6-0, 4-6, 6-3 என்ற செட் கணக்கில், அகிலை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதி போட்டியில், லயோலா மாணவர் யூனுஸ், ஈரோடு கலை கல்லுாரி மாணவர் பகலவன் இருவரும் மோதினர். இதில் யூனுஸ், 6-4 என்ற செட் கணக்கில், பகலவனை வென்றார்.
இரண்டாவது செட்டிலும், பகலவன் வெற்றி வாய்ப்பு பறிபோனது. அதில், யூனுஸ் 6-1 என்ற செட் கணக்கில், பகலவனை வீழ்த்தினார். இறுதியில், யூனுஸ் 6-4, 6-1 என்ற செட் கணக்கில், பகலவனை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். டென்னிஸ் இறுதி போட்டியில், லயோலா மாணவர் யூனுசும், செயின்ட் மைக்கேல்ஸ் மாணவர் அபினவும் மோதுகின்றனர்.
