கலவை சாதத்துடன் மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம் விரைவில் துவக்கம்!
கலவை சாதத்துடன் மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம் விரைவில் துவக்கம்!
UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 02:13 PM
ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு ஒன்றியத்தில் உள்ள, அங்கன்வாடி மையங்கள் மற்றும் மூன்று பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில், சோதனை அடிப்படையில், பலவகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் முன்னோடி திட்டம், கடந்த ஆண்டு மார்ச் 20ம் தேதி துவக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு, மாணவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால், தமிழகத்தில் உள்ள அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு திட்டம் நீட்டிக்கப்படும். இதற்காக ஆண்டுக்கு, 103.28 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின விழா அன்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து, திட்டத்தை அனைத்து மையங்களுக்கும் விரிவுப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தலைமைச் செயலகத்தில், அமைச்சர் வளர்மதி தலைமையில், சமூக நலத்துறை அலுவலர்கள், அனைத்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவு), ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பலவகை கலவை சாதத்துடன் மசாலா கலந்த முட்டை வழங்கும் திட்ட விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, அமைச்சர் வளர்மதி கூறியதாவது: முதல்வர் உத்தரவின்படி, விரைவில் அனைத்து மையங்களிலும், பலவகை கலவை சாதத்துடன், மசாலா கலந்த முட்டை வழங்கும் திட்டம், செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சமையலர்களுக்கு, பலவகை கலவை சாதம் மற்றும் மசாலா கலந்த முட்டை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடிந்ததும், அடுத்த மாதம் திட்டம் விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு வளர்மதி தெரிவித்தார்.
