கலைக் கல்லூரிகள் நோக்கி மாணவர்கள் - பொறியியல் சேர்க்கை மந்தம்
கலைக் கல்லூரிகள் நோக்கி மாணவர்கள் - பொறியியல் சேர்க்கை மந்தம்
UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 10:57 AM
புதுச்சேரி: கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை டல் அடிக்கிறது.
புதுச்சேரியில் அரசு கல்லுாரிகள் இரண்டு, 18 தனியார் பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில், ஆண்டிற்கு சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் படித்து வெளியேறுகின்றனர். பிளஸ் 2 முடித்தவுடன் பெரும்பாலான மாணவர்களின் கனவு பொறியியல் படிப்பதாக இருக்கும். ஆனால், இந்தாண்டு இந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. தனியார் பொறியியல் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீடாக 3,585 பி.டெக்., இடங்கள் பெறப்பட்டன.
இரண்டு முறை கவுன்சிலிங் நடத்தியும் 1,500 பி.டெக்., இடங்கள் கடைசிவரை நிரம்பவில்லை. இதனுடன், மேனேஜ்மெண்ட் இடங்களையும் சேர்த்தால் இந்தாண்டு 3,500 பி.டெக்., இடங்கள் நிரம்பாமல் உள்ளன. அதேசமயம், கலை - அறிவியல் கல்லுாரிகளுக்கு இந்தாண்டு பல மடங்கு மவுசு அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள கலை அறிவியல் கல்லுாரிகளில் மொத்தமுள்ள 2,108 இடங்களுக்கு வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன. இதற்கான கவுன்சிலிங்கில் 1,900 இடங்கள் நிரம்பின.
அடுத்த கட்டமாக, வரும் 1ம் தேதி கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், காலியாக உள்ள அனைத்து இடங்களும் நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலை - அறிவியல் படிப்புகளை பொறுத்தவரை, பி.காம். படிப்பிற்கு தான் மாணவர் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து கல்லுாரிகளிலும் பி.காம். இடங்கள் நிரம்பிவிட்டன. அரசு கல்லுாரிகளில் மட்டுமின்றி, தனியார் கல்லுாரிகளிலும் அனைத்து இடங்களும் முதல்முறையாக நிரம்பியுள்ளது.
அடுத்து, இயற்பியல், வேதியியல், உயிரியல் என அறிவியல் பாடப் பிரிவுகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிப் பாடங்கள் மீது மாணவர்களின் கவனம் திரும்பியுள்ளது. கலை - அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் இந்தாண்டு அதிகம் ஆர்வம் காட்டியதால், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மாணவர் சேர்க்கை டல் அடிக்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து கல்வியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
