ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்காமல் இழுத்தடிப்பு
ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்காமல் இழுத்தடிப்பு
UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 12:09 PM
சிவகங்கை: பள்ளி மாணவர், ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவர கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, மதிப்பூதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாக, புகார் எழுந்துள்ளது.
மத்திய அரசு சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு, 2013ல் கல்வித்துறை மூலம் நடந்தது. மாநில அளவில் கல்வி கற்கும் மாணவர்களின் விகிதாச்சாரம், பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்களின் விகிதம் போன்ற பல்வேறு புள்ளி விவரங்களை அறிந்து, அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்கில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கணிதம், கம்ப்யூட்டர் தெரிந்த ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்பணி முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், சிவகங்கை உட்பட ஒரு சில மாவட்டங்களில் கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படாமல், இழுத்தடிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "சிவகங்கை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்பு பணிக்கான மதிப்பூதியம் வழங்கவில்லை. பல மாவட்டங்களில் இத்தொகை வழங்கப்பட்டு விட்டது,” என்றார்.
