ஏழு மாதத்தில் 4,500 குழந்தை தொழிலாளர்கள் பள்ளி செல்லா குழந்தைகள் மீட்பு
ஏழு மாதத்தில் 4,500 குழந்தை தொழிலாளர்கள் பள்ளி செல்லா குழந்தைகள் மீட்பு
UPDATED : ஆக 28, 2014 12:00 AM
ADDED : ஆக 28, 2014 12:24 PM
விருதுநகர்: இந்தியாவில் பள்ளி செல்லும் வயதில் கல்வி கற்காமல் வேலைக்கு செல்லும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. இதை தடுக்க 1986ல் விருதுநகர் மாவட்டத்தில்தான் முதன்முதலாக தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் துவங்கப்பட்டது.
இது தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு என 15 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி அதிகாரிகள், தீப்பெட்டி ஆலை, செங்கல் சூளை, ஒர்க் ஷாப், கடைகள், வணிக நிறுவனங்களில் பணிசெய்யும் 9 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளை ஆய்வு செய்து கண்டறிந்து மீட்கின்றனர்.
அவர்களுக்கென, 340 சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு ஆசிரிய பயிற்றுனர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர். இதில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவு, உடை, பாடப்புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மாதம் ரூ. 150 உதவி தொகையும் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு மொத்தம் 11,000 பேர் கல்வி கற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை ஏழு மாதத்தில் 4,500 குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் மீட்கப்பட்டு, சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் விருதுநகர் மாவட்டத்தில் மீட்கப்பட்டோர் எண்ணிக்கை 210 என, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
