UPDATED : செப் 02, 2014 12:00 AM
ADDED : செப் 02, 2014 10:37 AM
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில், பராமரிப்பு பணிகள் அரைகுறையாக செய்யப்பட்டுள்ளன.
கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் உள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளி வளாகத்தில், அரசினர் மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதி, கடந்த 1981ம் ஆண்டு துவங்கப்பட்டது. பின், 2006ம் ஆண்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு, அதில் செயல்பட்டு வருகிறது.
விடுதியில் தற்போது, 50 மாணவர்கள் உள்ளனர். இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன், அரசு மாணவர் விடுதியில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், விடுதியில் உள்ள கழிப்பறைகள் மற்றும் கழிவுநீர் வெளியேறும் குழாய்கள் போன்றவற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல், விடுதிக்கு வர்ணம் பூசும் பணி மட்டும் நடந்துள்ளது.
இதனால், மாணவர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், அரசு மாணவர் விடுதியை பார்வையிட்டு, பணிகளை முழுமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
