பாராமரிப்பற்ற படிப்பகமும், ஊரக விளையாட்டு மைதானமும்
பாராமரிப்பற்ற படிப்பகமும், ஊரக விளையாட்டு மைதானமும்
UPDATED : செப் 02, 2014 12:00 AM
ADDED : செப் 02, 2014 10:39 AM
ஆர்.கே.பேட்டை: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட படிப்பகமும், ஊரக விளையாட்டு மைதானமும், பராமரிப்பு இன்றி கிடக்கிறது. மேய்ச்சல் நிலமாக மாறியுள்ள, அந்த பகுதியில், கால்நடைகள் உலா வருகின்றன.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், திருநாதராஜபுரம் ஊராட்சி, மாவட்டத்தின் மேற்கு எல்லையில் உள்ளது. நகரத்தில் இருந்து, வெகுதொலைவில் உள்ள இந்த குக்கிராமத்தைச் சேர்ந்த பகுதிவாசிகள், நகர நடப்பை அறிந்து கொள்ளவதற்காக, படிப்பகமும், விளையாட்டு திறனை மேம்படுத்திக்கொள்ள, ஊரக விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2007-08ம் ஆண்டில், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில், ஊரக விளையாட்டு மைதானமும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் படிப்பகமும் கட்டப்பட்டுள்ளன. பராமரிப்பு இல்லாததால், விளையாட்டு கருவிகள் பாழாகிவிட்டன. திறக்கப்படாததால், படிப்பகம் பயனின்றி கிடக்கிறது.
இதனால், படிப்பகத்தை சுற்றியுள்ள விளையாட்டு மைதானம், மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. இதில் கால்நடைகள் உலா வருகின்றன. படிப்பகத்தை திறக்கவும், விளையாட்டு மைதானத்தை சீரமைத்து, கருவிகளை பராமரிக்கவும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
