ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
UPDATED : செப் 03, 2014 12:00 AM
ADDED : செப் 03, 2014 10:28 AM
மரக்காணம்: மரக்காணம் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு ஆண்டாக ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தேர்ச்சி சதவீதம் குறைந்தது. அதையடுத்து, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் தொண்டு நிறுவன உதவியுடன், 14 ஆசிரியர்கள் தற்காலிக நியமனம் செய்யப்பட்டனர்.
இதனால், பள்ளியில் தேர்ச்சி சதவீதம் நல்ல நிலையில் இருந்தது. இந்த ஆண்டு தொண்டு நிறுவனம் தற்காலிக ஆசிரியர்களை திரும்ப பெற்று கொண்டதால், மாணவர்களுக்கு முக்கிய பாடங்களை நடத்த ஆசிரியர் இல்லை. ஓராண்டாக தலைமை ஆசிரியரும் இல்லை.
இதனால் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில், பள்ளிக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்கக்கோரி, நேற்று காலை பள்ளிக்கு வந்த பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்கள், பள்ளி நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்தில் கோரிக்கை நிறவேற்றப்படும் என கூறியதால், மாணவர்கள் கலைந்து சென்றனர்.
