அநீதிகளை வேரறுக்க கூரிய கோடாரியாக இளைஞர்கள் மாற வேண்டும்: கிரண் பேடி
அநீதிகளை வேரறுக்க கூரிய கோடாரியாக இளைஞர்கள் மாற வேண்டும்: கிரண் பேடி
UPDATED : செப் 05, 2014 12:00 AM
ADDED : செப் 05, 2014 11:30 AM
கோவை: சமூகத்தில் மலிந்துவிட்ட அநீதிகளை வேரறுக்க, கூரிய கோடாரியாக இளைஞர்கள் மாற வேண்டும், என, முன்னாள் டி.ஜி.பி., கிரண் பேடி பேசினார்.
இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் சார்பில், யூத் எம்பவர் மெண்ட் சீரிஸ் நிகழ்ச்சி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதில், சுய மற்றும் பொது வாழ்வை திறமையாக கையாளுவதற்கான கருவி என்ற தலைப்பில், முன்னாள் டி.ஜி.பி., கிரண்பேடி பேசியதாவது: இளைஞர்கள் தங்களது சுய வாழ்வை, நேர்மறையான மதிப்பீடுகளுடன் உருவாக்க வேண்டியது அவசியம்.
நேர்மை, ஒழுக்கம், உண்மை, நீதி வழி, நாட்டுப்பற்று உள்ளிட்ட மதிப்பீடுகள், பள்ளி பருவத்திலிருந்தே, பாடப்புத்தக அறிவுடன் சேர்த்து கற்பித்தல் ஆசிரியர்களது கடமை. சிறந்த குடிமகன்களால் மட்டுமே, நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும். சுய மதிப்பீட்டை வளர்த்து கொள்பவர்களால், போட்டி நிறைந்த உலகில், எத்தகைய சவால்களையும், எளிதில் சமாளிக்க முடியும்.
சமூகத்தில் மலிந்து விட்ட அநீதிகளான, பொறாமை, ஊழல், அடிமைத்தனம் உள்ளிட்டவைகளை வேரறுக்க, கூரிய கோடாரியாய் இளைஞர்கள் மாற வேண்டியது அவசியம். சமூக பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் சக்திமிக்க இளைய பாரதத்தையே, இந்தியா எதிர்பார்க்கிறது. இவ்வாறு கிரண் பேடி பேசினார்.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, அரசியலில் சாத்தியமாவது எப்போது? என்ற மாணவரின் கேள்விக்கு பதிலளித்த கிரண் பேடி, "இதே எதிர்பார்ப்பு எனக்குமிருக்கிறது. அரசியலுக்குள் பெண்கள் நுழைய தயங்குவது தவறு. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில், பெண்கள் இருப்பதாலேயே இந்த நடைமுறை சிக்கல் உருவாகிறது" என்றார்.
