சிறப்பாக பணிபுரிந்த 377 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது!
சிறப்பாக பணிபுரிந்த 377 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது!
UPDATED : செப் 06, 2014 12:00 AM
ADDED : செப் 08, 2014 08:33 AM
பள்ளிக் கல்வித்துறை சார்பில், சென்னையில் ஆசிரியர் தின விழா நடந்தது. துறை முதன்மை செயலர் சபிதா தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வரவேற்றார்.
சிறப்பாக பணிபுரிந்த 377 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். இந்த விருது, 5,000 ரூபாய் ரொக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு மடல் ஆகியவை அடங்கும். அமைச்சர் பேசுகையில், "கல்வியில், தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வரும் வகையில் தமிழக அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 53,258 ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர், சமுதாய உணர்வுடன் பணியாற்றி, தமிழகத்தின் புகழை உலகளவில் எடுத்துச்செல்ல வேண்டும்" என்றார்.
முன்னதாக, சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, தேசிய ஆசிரியர் நல நிதிக்கு 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சரிடம் வழங்கினார்.
விழாவில், அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
