அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா; 1.84 லட்சம் பேருக்கு பட்டம்!
அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா; 1.84 லட்சம் பேருக்கு பட்டம்!
UPDATED : நவ 06, 2014 12:00 AM
ADDED : நவ 06, 2014 11:58 AM
சென்னை, அண்ணா பல்கலையின், 35வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில், நவ. 5ம் தேதி காலை நடந்தது. கவர்னர், ரோசய்யா தலைமை தாங்கினார். பல்கலை துணைவேந்தர் ராஜாராம் வரவேற்றார்.
விழாவில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:
உலகள வில், ஒரு பக்கம் சத்தான உணவு கிடைக்காமல், குழந்தைகள் பாதிக்கும் நிலையும், மற்றொரு பக்கம் உணவுப் பொருட்கள் அதிகளவில் வீணாகும் நிலையும் இருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், அதிகளவில், உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தாலும், அவை முறையாக சேமிக்கப்படுவதில்லை. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், மக்கள் அதிகளவில் உணவுப் பொருட்களை வீணடிக்கின்றனர்.
சர்வதேச அளவில் அதிக பட்டினி நிலவும் 76 நாடுகளில், இந்தியா 55வது இடத்தில் உள்ளது. நாட்டில், சத்தான உணவுப்பொருள் கிடைக்காததால், எடை குறைவான குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன. இதுபோன்ற நிலை மாற வேண்டும். அண்ணா பல்கலையில், ’பயோ - டெக்னாலஜி’ துறை சார்ந்து, புதிய கொள்கைகள் இல்லை. அதை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சுவாமிநாதன் பேசினார்.
விழாவில், அனைத்து பாடப் பிரிவுகளிலும், முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு, தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. 1,010 பேர், பல்வேறு துறைகளில், பிஎச்.டி., பட்டங்களை பெற்றனர். இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில், 1.84 லட்சம் பேர், பட்டம் பெற்றனர்.
விழாவில், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், தொழில்நுட்பக் கல்வி கமிஷனர், பிரவீண்குமார், பல்கலை பதிவாளர், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

