சத்துணவு சாப்பிட்டவர்கள் மயக்கம் - அழுகிய முட்டை காரணமா?
சத்துணவு சாப்பிட்டவர்கள் மயக்கம் - அழுகிய முட்டை காரணமா?
UPDATED : நவ 21, 2014 12:00 AM
ADDED : நவ 21, 2014 11:18 AM
ரிஷிவந்தியம்: இளையனார்குப்பம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள், நேற்று மாலை, திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், இளையனார்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில், நேற்று மதியம், 400 மாணவ, மாணவியர், மதிய உணவு சாப்பிட்டனர். மாலை 3:00 மணியளவில், நான்கு முதல் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் என, எட்டு பேர் மயங்கி விழுந்தனர்.
அவர்கள் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற மாணவர்களும் வயிறு வலிப்பதாகவும், வாந்தி வருவதாகவும் கூறியதால், வாணாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மாணவர்களை பரிசோதித்தார்.
சங்கராபுரம் ஒன்றிய சேர்மன், தாசில்தார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆகியோர் மாணவர்களை பார்வையிட்டனர். மதிய உணவில் அழுகிய முட்டை இருந்ததா என அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

