காலியாகவுள்ள கம்ப்யூட்டர் பாட ஆசிரியர் பணியிடங்களால் மாணவர்களுக்கு சிக்கல்
காலியாகவுள்ள கம்ப்யூட்டர் பாட ஆசிரியர் பணியிடங்களால் மாணவர்களுக்கு சிக்கல்
UPDATED : பிப் 15, 2015 12:00 AM
ADDED : பிப் 15, 2015 12:24 PM
சென்னை: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர் பணியிடங்கள்,1,400 அரசு பள்ளிகளில் காலியாக உள்ளதால், பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2,600 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஐ.டி., பிரிவு வளர்ச்சி தாக்கத்தால் அனைத்து பள்ளி மேல்நிலை வகுப்பிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. இந்த பாடப் பிரிவில் சேர, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், முறையாக பயிற்சி பெற முடியவில்லை.
பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்கள் நியமனம் சார்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், புதிய ஆசிரியர்களை நியமிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதில், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது, 1,200 பள்ளிகளில் மட்டுமே, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் ஆசிரியர்கள் உள்ளனர். மீதமுள்ள, 1,400 பள்ளிகளில், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை. போதிய கல்வித்தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்களைக் கொண்டு, சில பள்ளிகளில் வாரத்திற்கு மூன்று நாட்கள் பாடங்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
சில பள்ளிகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆய்வகங்கள் பூட்டப்பட்டுள்ளன. கடந்த, 2013 அக்டோபரில், ஐகோர்ட் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், 2014ஜனவரிக்குள், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலர் பரசுராமன் கூறுகையில், "தமிழகத்தில், 1,400 பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, பள்ளிக்கல்வித்துறை உடனே தீர்வு காண வேண்டும்" என்றார்.
