தகுதிகாண் பருவம் கிடைக்காமல் தவிக்கும் 780 ஆசிரியர்கள்
தகுதிகாண் பருவம் கிடைக்காமல் தவிக்கும் 780 ஆசிரியர்கள்
UPDATED : பிப் 17, 2015 12:00 AM
ADDED : பிப் 17, 2015 11:50 AM
மதுரை: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 2011-12ல் 780 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கல்வித்துறை வழக்கு ஒன்று கோர்ட்டில் நிலுவையில் இருந்ததால் அந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமன உத்தரவில் தற்காலிக பணியிடம் என குறிப்பிடப்பட்டது.
பொதுவாக ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தது முதல் ஓராண்டில் அவர்களுக்கு பணிவரன் முறையும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தகுதிகாண் பருவமும் வழங்கப்படும்.
ஆனால் தற்காலிக பணியிடம் என்ற வார்த்தை உத்தரவில் குறிப்பிடப்பட்டதால் வழக்கமாக தகுதிகாண் பருவம் வழங்கும் முதன்மை கல்வி அலுவலர்கள், "இதுகுறித்து இணை இயக்குனர்தான் வழங்க முடியும் எனவும்; இணை இயக்குனரை அணுகினால், டி.ஆர்.பி., மூலம் பணிநியமனம் செய்திருந்தால் முதல் ஓராண்டில் பணிவரன்முறையும், அடுத்து தகுதிகாண் பருவமும் வழங்கலாம். முதன்மை கல்வி அலுவலர்கள் தான் வழங்க வேண்டும். அவரையே அணுகுங்கள்" என்றும் கூறுவதால், மாநில அளவில் 780 ஆசிரியர்கள் தகுதிகாண் பருவம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சரவணமுருகன் கூறுகையில், "மூன்று ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு கல்வித்துறை அதிகாரிகள் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.
