தேர்வெழுதும் மாணவர்களுக்கு நேர மேலாண்மை குறித்து பயிற்சியளிக்க கல்வித்துறை முன்வருமா?
தேர்வெழுதும் மாணவர்களுக்கு நேர மேலாண்மை குறித்து பயிற்சியளிக்க கல்வித்துறை முன்வருமா?
UPDATED : பிப் 18, 2015 12:00 AM
ADDED : பிப் 18, 2015 10:39 AM
அரையாண்டு தேர்வின்போதே, சிலபஸ் பாடங்கள் முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த ஒன்றரை மாதங்களாக திருப்புதல் தேர்வு, அடிக்கடி பயிற்சி தேர்வுகளை நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறது. பிளஸ் 2 தேர்வு துவங்க 15 தினங்களும், 10ம் வகுப்பு தேர்வுக்கு 1 மாதம் மட்டுமே கால அவகாசம் உள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, நேர மேலாண்மை குறித்து கற்பிக்க, கல்வித்துறை முன்வர வேண்டும். இதுகுறித்து, ஆசிரியர்கள் தனியாக பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடை எழுத அனுமதிக்கப்பட்ட இரண்டரை மணி நேரம் அல்லது 3 மணி நேர அவகாசத்துக்குள் முழுமையாக, அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில், படங்கள் வரைய வேண்டும்; அதன் பாகங்களை குறிக்க வேண்டும். உதாரணங்களை சுட்டி காட்டி எழுத வேண்டும். கணக்கீடுகளை குறிப்பிட்டு காட்ட வேண்டும்.
சிறந்த முறையில் படித்து தேர்வுக்கு தயாரான மாணவர்கள் சிலருக்கு, அனைத்து வினாக்களுக்கும் பதில் தெரிந்திருந்தாலும், தேர்வறையில் நேரத்தை எவ்வாறு செலவிடுவது என தெரியாமல், 10 முதல் 20 மதிப்பெண் வரை விடை எழுத நேரமின்றி போய்விடுகிறது.
விடைத்தாள் எழுதி முடிக்கும் நேரம் நெருங்கும் நிலையில், தெரிந்த பதில்களை கூட, பதட்டத்தில் அரைகுறையாக எழுதுவதால், மதிப்பெண் இழக்க நேரிடுகிறது. ஒவ்வொரு பாடத்திலும் எந்தெந்த பகுதி வினாக்களுக்கு எவ்விதமாக நேரம் ஒதுக்க வேண்டும்; நேரத்தை எவ்வாறு பங்கிட்டு கொள்ள வேண்டும் என்பதில், பல மாணவர்களுக்கு குழப்பமே நிலவுகிறது.
பாடம் வாரியாக மதிப்பெண் அடிப்படையிலான வினாக்கள், படம் வரைய வேண்டிய வினாக்கள், அதிக நேரத்தை இழக்கும் வகையிலான, தவிர்க்க வேண்டிய வினாக்கள் பற்றி, மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். தேர்வறையில் எந்தெந்த வகையில் நேரத்தை மிச்சப்படுத்துவது, நேர விரயத்தை தவிர்ப்பது என்பது பற்றி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்.
