திருப்புதல் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து கல்வித்துறை சார்பில் ஆய்வு
திருப்புதல் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து கல்வித்துறை சார்பில் ஆய்வு
UPDATED : பிப் 18, 2015 12:00 AM
ADDED : பிப் 18, 2015 10:48 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 இறுதி திருப்புதல் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து கல்வித்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.
மதுரையில் பிளஸ் 2 தேர்வில் 95 சதவீதம் தேர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்வித் துறை பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. காலை, மாலை சிறப்பு வகுப்புகள், சராசரிக்கு கீழ் உள்ள மாணவர்களை தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் கையேடுகள் வழங்கப்பட்டன.
இறுதி திருப்புதல் தேர்வுகள் முடிந்த நிலையில் கல்வி மாவட்டம் வாரியாக அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ள, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவிட்டார்.
மதுரை கல்வி மாவட்டத்திற்கு கேப்ரன் ஹால், உசிலம்பட்டி கல்வி மாவட்டத்திற்கு சாய்ராம், மேலுார் கல்வி மாவட்டத்திற்கு மேலுார் அரசு பள்ளிகளில் மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் ஆய்வு நடந்தது. தேர்ச்சி குறைந்த பள்ளி தலைமையாசிரியர்கள் அதற்கான விளக்கம் அளித்தனர்.
