UPDATED : பிப் 19, 2015 12:00 AM
ADDED : பிப் 19, 2015 11:57 AM
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள எலகங்கா விமானப்படை தளத்தில், ’ஏரோ இந்தியா’ சர்வதேச விமான கண்காட்சி நேற்று துவங்கியது. இதில், இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளில் இருந்து, 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
* 295 இந்திய நிறுவனங்கள், 328 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
* அதிக எண்ணிக்கையில், அமெரிக்க நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அந்நாட்டிலிருந்து, 64 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. * இரண்டாவது அதிக எண்ணிக்கையில், பிரான்சின், 58 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.
* பிரிட்டனின் 48, ரஷ்யாவின் 41, இஸ்ரேலின் 25, ஜெர்மனியின் 17 நிறுவனங்கள், தங்கள் விமானங்கள் மற்றும் கருவிகளை விற்பனை செய்ய, பெங்களூருவில் குவிந்து உள்ளன.
சாகச குழுக்கள்:
இந்திய விமானப்படையின் கண்காட்சி சாகச குழுவான, ’சரங்’ போல, சுவீடன், பிரிட்டன், செக் குடியரசு, அமெரிக்கா ஆகிய நாடுகளின் விமான சாகச குழுக்களும், தங்கள் விமானங்களுடன், எலஹங்கா விமானப்படை தளத்தில் குவிந்துள்ளன.
அமெரிக்க விமானங்கள்
* ’எப் 15 சி ஈகிள்ஸ் - 2
* எப் 16 சி பைட்டிங் பால்கன்ஸ் - 2
* போயிங் கே.சி., 135 டாங்கர்
* சி 17 குளோப்மாஸ்டர் 3 - 1
* பி 8 ஏ பொசைடான் கடல் கண்காணிப்பு விமானம் மேலும், பிரான்சின், மிகப் பெரிய, ’டஸ்ஸால்ட்’ போர் விமானங்களும், காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு உற்பத்தி: மோடி நம்பிக்கை
சர்வதேச விமான கண்காட்சியை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்த கண்காட்சியில் பங்கேற்கும் நாடுகள், இந்தியாவுக்கு நவீன தொழில்நுட்பங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களாக மட்டும் இருக்காமல், ராணுவத்தின் பங்குதாரர்களாகவும் இருக்க வேண்டும். ராணுவ தொழில் துறையில், உலகின் முக்கிய மையமாக இந்தியா விளங்கும்.
அதற்கேற்ற வகையில், சுமுகமான வர்த்தக சூழ்நிலை இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரி முறையில் எவ்வித பாரபட்சமும் காட்டப்படுவது இல்லை. ராணுவ தளவாடங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும்; இறக்குமதியை குறைக்க வேண்டும் என விரும்புகிறோம். அதற்காகத் தான், ’மேக் இன் இந்தியா’ கோஷத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
இறக்குமதியில், 20 - 25 சதவீதம் குறைப்பு செய்தால் கூட, உள்நாட்டில் கூடுதலாக, 1 லட்சம் முதல், 1.2 லட்சம் வரை கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, ராணுவ தளவாடங்களுக்கான உள்நாட்டு உற்பத்தி மேம்பட ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
