அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்கள் மாயமானதால் அதிகாரிகள் அதிர்ச்சி
அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்கள் மாயமானதால் அதிகாரிகள் அதிர்ச்சி
UPDATED : பிப் 20, 2015 12:00 AM
ADDED : பிப் 20, 2015 10:52 AM
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை, இருப்பு அறையில் இருந்த மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மாயமானதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் காரணமாக, பல்கலைக்கழகத்தை, அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. தமிழக அரசு முதன்மைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நிர்வாக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும்போது அவற்றுக்கு டம்மி எண் கொடுத்து திருத்தம் செய்து, தேர்வுத்துறை கட்டடத்தில் உள்ள விடைத்தாள் கட்டுகள் இருப்பு வைக்கும் அறையில் வைக்கப்படும்.
அவ்வாறு வைக்கப்பட்ட, கடந்த செமஸ்டரின் பி.எஸ்சி., எம்.எஸ்சி., தேர்வு எழுதிய 550 மாணவர்களின், 22 வினாத்தாள் கட்டுகளை காணவில்லை. தேர்வுத்துறை இயக்குனரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் இந்த அறையை, அதற்கென உள்ள தனி அலுவலர்கள் மட்டுமே திறக்க முடியும். அப்படியிருக்கும்போது விடைத்தாள்கள் காணாமல் போனது, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
நேற்று காலை, நிர்வாக அதிகாரி சிவ்தாஸ் மீனா, விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த அறையை ஆய்வு செய்து, அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார். அதில், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விடைத்தாள்களை தேடும் பணி நடக்கிறது.
டூப்ளிகேட் சாவிகளால் தொடரும் தில்லுமுல்லு!
தேர்வுத்துறையில் விடைத்தாள் இருப்பு அறை பூட்டின் சாவி, அனைத்து அலுவலக உதவியாளர்களிடமும் உள்ளது. தில்லுமுல்லு நடப்பதை அறிந்து, புதிய பூட்டு போட்டால், அடுத்த சில நாட்களில், டூப்ளிகேட் சாவி போட்டு அனைத்து, அலுவலக உதவியாளர்களும், புதிய சாவியை வைத்துக் கொள்வது வழக்கம்.
அதனால்தான், தேர்வுத்துறையில் சர்வ சாதாரணமாக விடைத்தாள்கள் மாற்றம், மதிப்பெண்கள் திருத்தம் போன்ற தில்லுமுல்லு வேலைகள் நடப்பதாக, அங்குள்ள ஊழியர்கள் புலம்புகின்றனர். என்னதான் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டாலும், முறைகேடு நடப்பது தொடர்கதையாகவே உள்ளது.
