போலீஸ் எஸ்.ஐ. தேர்வுக்கு விண்ணப்பிக்க தடையின்மை சான்று கிடைக்காமல் போலீசார் தவிப்பு
போலீஸ் எஸ்.ஐ. தேர்வுக்கு விண்ணப்பிக்க தடையின்மை சான்று கிடைக்காமல் போலீசார் தவிப்பு
UPDATED : பிப் 20, 2015 12:00 AM
ADDED : பிப் 20, 2015 10:55 AM
சென்னை: போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, தடையின்மை சான்று கோரிய கோப்பு, போலீஸ் இணை கமிஷனர் அலுவலகங்களில் துாங்குவதால், கையறு நிலையில் போலீசார் தவிக்கின்றனர்.
தமிழக காவல் துறையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம், சட்டம் - ஒழுங்கு பிரிவில், 1,078 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த 8ம் தேதி, அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்தது. தபால் மூலம்இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள, 28 வயதுக்கும் மிகாமல் உள்ள வாலிபர்கள், தபால் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
எஸ்.ஐ., தேர்வில், 94 பேர், காவல் துறையில் பணிபுரிவோர், அவர்களின் வாரிசுதாரர்கள், பெண் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள், தனித்தனியே எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
காவல் துறை சார்ந்தவர்கள், பொது ஒதுக்கீட்டிற்கான வயது, பிற தகுதிகள் பெற்றிருப்பின், பொது ஒதுக்கீட்டிலும் விண்ணப்பித்து தேர்வு எழுதலாம். இந்நிலையில், காவல் துறையில் ஐந்தாண்டுகள் பணி முடித்த போலீசார், வயது மற்றும் தகுதி இருப்பின், எஸ்.ஐ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, தடையின்மை சான்று அவசியம்.
அதற்கான நகல் மற்றும் சான்று எண்ணை, ஆன்லைன் மூலம் தெரிவித்தால் மட்டுமே, அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
அதற்காக, சென்னையில் பணிபுரியும் போலீசார், இணை கமிஷனர் அலுவலகங்களில், தடையின்மை சான்று கேட்டு மனு அளித்துள்ளனர். அதற்கான கோப்பு கையெழுத்தாகாமல், பல நாட்களாக கிடப்பில் உள்ளது. இதனால், மார்ச் 10ம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால், அதற்குள், தடையின்மை சான்று கிடைத்துவிடுமா என்ற எதிர்பார்ப்பில், போலீசார் உள்ளனர்.
