UPDATED : பிப் 21, 2015 12:00 AM
ADDED : பிப் 21, 2015 11:37 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாணவ, மாணவியர், தனித்தேர்வர்கள் என மொத்தம் 7,144 பேர் எழுத உள்ளனர். இதற்கான தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக், சுயநிதி என 66 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், இந்தாண்டு மார்ச் 5ம் தேதி துவங்க உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை, மாணவர்கள் 2,979 பேரும், மாணவியர் 3,874 மற்றும் தனித்தேர்வர்கள் 291 பேர் என மொத்தம் 7,144 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதில், தனித்தேர்வர்கள் ருக்மணியம்மாள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதுகின்றனர்.
தற்போது, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகின்றன. முதல் கட்டம் முடிந்து, இரண்டாம் கட்ட செய்முறைத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்விற்கு, 11 நாட்கள் மட்டுமே உள்ளதால், அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
12ம் வகுப்புதேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு, ஹால்டிக்கெட் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தனித்தேர்வர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வுகளின்போது, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கல்வித்துறை சார்பில், தலைமையாசிரியர்களுக்கு பயிற்சியும், கையேடும் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்வு மையங்களில், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? அவற்றை மேம்படுத்துவது குறித்த பணிகளில் கல்வித்துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மார்ச் 5ம் தேதி முதல் துவங்கி, 31ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுகிறது. இதில், பறக்கும்படை, நிலை அலுவலர் (ஸ்டாண்டிங் ஸ்கவுடு) நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் மூலம் மாணவர்கள் விதிமுறைகளை கடைபிடிக்கின்றனரா? என கண்காணிக்கப்படுகிறது.
பொதுத்தேர்வு எழுதும் மையங்களுக்கு வினாத்தாள்களை எடுத்துச்செல்ல வழித்தட அலுவலர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தேர்வுகள் காலை, 10:00 மணிக்கு துவங்கி, மதியம் 1:15 மணி வரை நடைபெறுகிறது. இதில், முதல், 10 நிமிடம் வினாத்தாள் வாசிக்கவும், ஐந்து நிமிடம் விடைத்தாள் தயார் செய்வதற்கும் நேரம் ஒதுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வினாத்தாள்களுக்கு பலத்த பாதுகாப்பு
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான அனைத்து வினாத்தாள்களும், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த வினாத்தாள் கட்டு வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை எவ்வித பிரச்னைகளுமின்றி பாதுகாப்பாக அமைதியாக நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
