சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்ட பொறியியல் மாணவர் இறப்பு
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்ட பொறியியல் மாணவர் இறப்பு
UPDATED : பிப் 23, 2015 12:00 AM
ADDED : பிப் 23, 2015 12:32 PM
பொள்ளாச்சி: சிறுவர் சீர்திருத்த பள்ளியில், பொறியியல் மாணவர் மர்மமாக இறந்தார்.
மூன்றாமாண்டு கிருஷ்ணகிரியை அடுத்த, புல்லுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வினோத்குமார், 20; கோவை அருகே, பொறியியல் கல்லூயில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாமாண்டு படித்து வந்தார். கடந்த மாதம், மாணவர்களிடையே ஏற்பட்ட அடிதடியில், நான்காமாண்டு மாணவர் கார்த்திக் இறந்தார்.
இந்த வழக்கில், மதுக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த வினோத்குமார், விசாரணைக் கைதியாக, பொள்ளாச்சி ’பார்ஸ்டல்’ பள்ளி (சிறுவர் சீர்திருத்தப்பள்ளி) அடைக்கப்பட்டார். நேற்று காலை, அவர் திடீரென வாந்தி எடுத்தார். பார்ஸ்டல் பள்ளி அதிகாரிகள், அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது இறந்தார். போலீசார், விசாரித்து வருகின்றனர்.
வினோத்குமார் இறந்தது குறித்து, கோவை சிறை கண்காணிப்பாளர் ஆனந்தன் விசாரணை நடத்தினார். அவர், பார்ஸ்டல் பள்ளிக்கு வந்த போது, கைதிகள் அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக, மரத்தின் மேல் ஏறி கூச்சல் போட்டனர். விசாரித்த போது, நேற்று முன்தினம் மதியமே, வினோத்குமார் வயிற்றுவலியால் அவதிப்பட்டது தெரிய வந்தது.
சிகிச்சையில்லை
சிறைக் கண்காணிப்பாளர் ஆனந்தன் கூறுகையில், ”இறந்த மாணவர் வினோத்குமார், தன் உடல்நிலை குறித்து முறையிட்டும், மருத்துவ சிகிச்சை அளிக்காமல் விட்டுள்ளனர்; சரியான நேரத்திற்கு சிகிச்சையளித்திருந்தால், அவரை காப்பாற்றியிருக்க முடியும்; அதை செய்ய தவறிய அதிகாரிகளை, ’சஸ்பெண்ட்’ செய்துள்ளோம்; தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,” என்றார்.
