இ.எஸ்.ஐ., மருத்துவ மாணவர் நடத்தும் போராட்டம் 6வது நாளாக நீடிப்பு
இ.எஸ்.ஐ., மருத்துவ மாணவர் நடத்தும் போராட்டம் 6வது நாளாக நீடிப்பு
UPDATED : பிப் 24, 2015 12:00 AM
ADDED : பிப் 24, 2015 10:47 AM
சென்னை: மருத்துவ கல்லூரிகளை மூடும் முடிவை கைவிடக்கோரி, இ.எஸ்.ஐ., மருத்துவ மாணவர் நடத்தும் போராட்டம், ஆறாவது நாளாக நீடிக்கிறது. உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும், 13 இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில், சென்னை மற்றும் கோவையில், இந்த கல்லூரி உள்ளது. இவற்றை, இ.எஸ்.ஐ., தலைமையகம் நடத்தி வருகிறது. பல்வேறு சிக்கல்களால், இந்த கல்லூரிகளை மூட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப, அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கை பட்டியலில், இ.எஸ்.ஐ., கல்லூரிகளின் பட்டியல் இல்லை.
இதனால், அதிருப்தியடைந்த இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி மாணவர்கள், 18ம் தேதி முதல், போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவ மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம், ஆறாவது நாளாக நேற்றும் நீடித்தது.
நேற்று, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். பின், வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இன்று, உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் சவுந்தர்யா கூறியதாவது: இ.எஸ்.ஐ., கல்லூரிகளை மூடக்கூடாது; மாணவர் சேர்க்கையை நிறுத்தக்கூடாது என போராடி வருகிறோம். இ.எஸ்.ஐ., இயக்குனரோ, அதன் பிரதிநிதியோ வந்து நேரில் பேச்சு நடத்த வேண்டும்; அல்லது சந்திக்க நேரம் ஒதுக்கித் தர வேண்டும். இல்லாவிட்டால், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம். மற்ற இ.எஸ்.ஐ., மருத்துவ மாணவர்களும் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
