சிறுவர்கள் அடிக்கடி தப்பியோடியதால் கூர்நோக்கு இல்லம் மூடல்
சிறுவர்கள் அடிக்கடி தப்பியோடியதால் கூர்நோக்கு இல்லம் மூடல்
UPDATED : பிப் 28, 2015 12:00 AM
ADDED : பிப் 28, 2015 11:21 AM
மதுரை: மதுரை அரசு கூர்நோக்கு இல்ல சிறுவர்கள் அடிக்கடி தப்பியோடியதால் மூடப்பட்டது.
மதுரை காமராஜர் சாலையில் அரசு கூர்நோக்கு இல்லம் இருந்தது. இது சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் பாலர் உதவி சங்கம் மூலம் செயல்பட்டது. குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 10 முதல் 18 வயதுள்ள 26 சிறுவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டனர். சமீபத்தில் போலீசாரை தாக்கிவிட்டு ஒன்பது சிறுவர்கள் தப்பினர்.
பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி, பணியாளர் பற்றாக்குறை, 17 மாதமாக சம்பளம் வழங்காதது, அடிக்கடி தப்பியோடும் சிறுவர்கள் என பல்வேறு பிரச்னைகள் காரணமாக மதுரை அரசு கூர்நோக்கு இல்லம் மூடப்பட்டது.
பாலர் உதவி சங்க செயலாளர் பழனியப்பன் கூறியதாவது: கட்டடம் பழுதடைந்து விட்டது. அதை சீரமைக்க வேண்டி உள்ளது. எனவே இங்கிருந்த 17 சிறுவர்களில் பத்து பேர் நெல்லை கூர்நோக்கு இல்லத்திற்கும், ஏழு பேர் திருச்சி கூர்நோக்கு இல்லத்திற்கும் மாற்றப்பட்டனர். மீண்டும் எப்போது செயல்படும் என தெரியாது. இங்குள்ள பணியாளர்கள் நிலை குறித்து அரசிடம் இருந்து எந்த முடிவும் வரவில்லை என்றார். கூர்நோக்கு இல்லத்தை அரசே ஏற்று நடத்தயிருப்பதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
