UPDATED : செப் 03, 2015 12:00 AM
ADDED : செப் 03, 2015 11:22 AM
சென்னை
: போதிய விடுதி வசதி இல்லாததால், சென்னை மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்பு துவங்கிய முதல் நாளே விடுமுறை அறிவித்து, மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
தமிழகம் முழுவதும், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் நேற்று முன்தினம் துவங்கின. சென்னை மருத்துவக் கல்லுாரியில், புதிய மாணவர்களை வரவேற்கும், பிரத்யேக வரவேற்பு விழா நடந்தது. இதன் பின்,பிராட்வே பகுதியில் உள்ள விடுதியில் சேர மாணவர்கள் சென்றனர்.&'ஏற்கனவே, இட நெருக்கடியில் உள்ளோம்; புதிய மாணவர்களை தங்க அனுமதிக்கக்கூடாது என, மூத்த மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். கல்லுாரி முதல்வர் பேசியும் சிக்கல் தீராததால், அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு கட்டட மாடியில் உள்ள அறைகளில், புதிய மாணவர்கள் தற்காலிகமாக தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்தன.
அந்த அறைகளை பெற்றோர் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனையில் மாணவர்களை தங்க வைப்பதா என, அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, 13ம் தேதி வரை கல்லுாரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 14ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும் எனக் கூறி, மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டாக்டராகும் கனவுடன் கல்லுாரிக்கு வந்த மாணவர்களை, பிரசித்திபெற்ற மருத்துவக் கல்லுாரியில், இட வசதியில்லை எனக் கூறி, திருப்பி அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
13ம் தேதிக்குள், சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரி விடுதி தயாராகிவிடும். முதலாம் ஆண்டு மாணவர்கள் அந்த விடுதியில் தங்க வைக்கப்படுவர். 14ம் தேதி முதல், வகுப்புகள் துவங்கும் என,மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
