கல்வி உதவித்தொகை; தொழிலாளர் நல வாரிய உறுப்பினருக்கு அழைப்பு
கல்வி உதவித்தொகை; தொழிலாளர் நல வாரிய உறுப்பினருக்கு அழைப்பு
UPDATED : செப் 15, 2015 12:00 AM
ADDED : செப் 15, 2015 10:57 AM
நாமக்கல்
: தொழிலாளர் நல
வாரியத்தில், தொழிலாளர் நலநிதி
செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது என, நாமக்கல் தொழிலாளர் ஆய்வாளர் மஞ்சள்நாதன்
தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு, தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. புத்தகங்கள் வாங்குவதற்கு, பிளஸ் 1 வகுப்பு முதல், முதுகலைப் பட்டம் வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடநூல் நிதியுதவி அளித்தல், இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கான கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை. தொழிற்பயிற்சிக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை.
எஸ்.எஸ்.எல்.ஸி., பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில், கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற, முதல், 10 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல். இத்திட்டங்கள் தொழிலாளர் நல நிதி செலுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், அக்டோபர், 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
நலத்திட்டங்கள் குறித்து விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு, செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு, சுயவிலாசமிட்ட தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
