UPDATED : ஜன 11, 2016 12:00 AM
ADDED : ஜன 11, 2016 12:34 PM
அ நிறம் | அளவு
வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டுமென்றால், தேனீயைப் போல ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைவிட, புதிய புதிய முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். முயற்சி என்னும் சிறகுகலை அசைக்காமல் வளர்ச்சி என்னும் வானத்தில் வலம் வரமுடியாது. உள்ளத்தில் இலட்சியம் அக்னியாக ஒளிர்ந்தாலும், முயற்சி எடுப்பதற்குத் தயக்கம் காட்டினால் வெற்றிப் படிக்கட்டுகளில் ஒருபோதும் முன்னேறிச் செல்ல முடியாது!
ஆகவே தயக்கத்தைத் தகர்த்து விட்டு, தன்னம்பிக்கையோடு தொடர்ந்து முயற்சித்து ஜெயித்துக் கொண்டே இருங்கள். ஏனென்றால் முதன்மையாக இருப்பதல்ல வெற்றி; முன்னேறிக் கொண்டே இருப்பதுதான் வெற்றி! தோல்வி நேர்ந்து விடுமோ என்ற அச்சமும், தோற்றுவிட்டால் பிறர் பரிகாரம் செய்வார்களோ என்ற கூச்சமும்தான் தயக்கத்திற்கு மூலகாரணங்கள்! ஆகவே, இவற்றை உள்ளத்தில் இருந்து விரட்டியடியுங்கள்!
வெற்றி உங்களை வெளியுலகிற்கு அடையாளம் காட்டுகிறது. வெற்றியினால் கிடைக்கும் பரிசுகளைவிடத் தோல்வியினால் கற்றுக் கொள்ளும் பாடங்களின் மதிப்பு உயர்ந்தவை, என்பதை உணர்ந்து, எப்பொழுதும் தயக்கத்தைத் தள்ளிவைத்து விட்டு, முனைப்போடு முயலுங்கள்; வெற்றியின் வாசல் உங்களுக்காகத் திறந்தே இருக்கிறது.
நம்மைப் பற்றி பிறர் என்ன கூறுவார்கள் என்ற சிந்தனையை, நெஞ்சில் இருந்து கிள்ளி வீசுங்கள்.; போற்றுவோர் போற்றட்டும்; தூற்றுவோர் தூற்றட்டும். எனக்கு உகந்த நல்லதை தொடர்ந்து செய்வேன் எனும் உறுதியோடு, முடிவில்லாத முயற்சிகளைத் தொடருங்கள். ஆம்! முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால், சாதாரண மனிதனும் சாதனையாளன் ஆகலாம். நீரில் குதிக்காமல் நீச்சல் கற்க முடியாது. அதுபோல, செயலில் இறங்காமல் வெற்றிகளைக் குவிக்க முடியாது.
ஒவ்வொரு தோல்வியையும் பாட நூலாக்கி, தவறுகளையும் குறைகளையும் நீக்கி, தொடர்ந்து முயலுங்கள்! வளர்ச்சிதான் வாழ்க்கை; நம்பிக்கை தான் முன்னோக்கிச் செலுத்தும் உந்துவிசை!
