மோசடி புகார்; அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் கடும் அதிருப்தி
மோசடி புகார்; அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் கடும் அதிருப்தி
UPDATED : ஜன 13, 2016 12:00 AM
ADDED : ஜன 13, 2016 11:41 AM
சேலம்
: சேலம்
அரசு கலைக்கல்லூரியில், எம்.பில்., தேர்வு மோசடி புகாரில் சிக்கியுள்ள ஆசிரியருக்கு, பெரியார் பல்கலை, பி.ஹெச்.டி., வழிகாட்டி தகுதி வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக இருப்பவர் மாறவர்மன். வரலாற்றுத்துறையில், மகாலட்சுமி என்ற எம்.பில்., மாணவியின் வழிகாட்டியாக உதவி பேராசிரியர் ரங்கநாதன் இருந்துள்ளார். இம்மாணவியின் வைவா தேர்வின் போது, ரங்கநாதனுக்கு தெரியாமலேயே, மாறவர்மன் கைடாக செயல்பட்டு, முழு மதிப்பெண் வழங்கியுள்ளார்.
இந்த மோசடி புகார் மீது, விசாரணை நடத்திய கல்லூரி முதல்வர் தனலட்சுமி, உதவி பேராசிரியர் மாறவர்மன் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, பெரியார் பல்கலைக்கு பரிந்துரை செய்திருந்தார். இதற்கான, மூன்று பேராசிரியர்கள் அடங்கிய விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. தற்போது, பி.ஹெச்.டி., முடித்துள்ள உதவி பேராசிரியர் மாறவர்மன், பி.ஹெச்.டி., வழிகாட்டி தகுதிக்கு விண்ணப்பித்துள்ளார்.
எம்.பில்., தேர்வு மோசடி புகார் மீது விசாரணை
நடந்து வரும் நிலையில், பி.ஹெச்.டி., வழிகாட்டி தகுதி வழங்கக்கூடாது என, மற்ற ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மாறவர்மனுக்கு பி.ஹெச்.டி., வழிகாட்டி தகுதி
வழங்கி, பெரியார் பல்கலை பதிவாளர் மணிவண்ணன்
உத்தரவிட்டுள்ளார். இது ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர் கழக கிளை செயலாளர் அழகரசன் கூறியதாவது: மோசடி புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், எம்.பில்., வழிகாட்டி தகுதியையே ரத்து செய்ய வேண்டி வரும். இந்நிலையில், மாறவர்மன், பி.ஹெச்.டி., வழிகாட்டி தகுதிக்கு விண்ணப்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விசாரணை முடியும் வரை வழிகாட்டி தகுதி வழங்கக்கூடாது என வலியுறுத்தியும், ஆசிரியர் சங்கத்தின் சார்பில், துணைவேந்தர் சுவாமிநாதனிடம் கூறியிருந்தோம்.
விதிமுறை மீறி வழங்க மாட்டோம் என, அவர் உறுதி கூறிய இரண்டு நாளில், வழிகாட்டி தகுதி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எங்களது உயர்மட்டக்குழு கூடி, அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
