UPDATED : ஜன 14, 2016 12:00 AM
ADDED : ஜன 14, 2016 02:13 PM
”பிள்ளைகளை கட்டாயமாக தமிழ் படிக்க விடுங்கள்,” என கவிஞர் வைரமுத்து பேசினார்.
வைரமுத்து எழுதிய சிறுகதைகள் அறிமுக விழா மலேசியாவில் கோலாலம்பூரில் நடந்தது. மலேசியா சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், விளையாட்டுத்துறை இணை அமைச்சர் டத்தோ சரவணன் புத்தகத்தை அறிமுகப்படுத்தினர்.
வைரமுத்து பேசியதாவது: தாய் தமிழகத்தையும், உங்களையும் கடல் பிரித்து வைத்தாலும், தமிழ் நமக்கிடையே கலாசார பாலம் கட்டி வைத்திருக்கிறது. இங்கு பெருங்கூட்டத்தை பார்க்கும்போது, தமிழ் வீழாது தன் சொந்தக் கால்களால் நிற்கும் என்ற நம்பிக்கை பெறுகிறேன். 40 சிறுகதைகளை ஒரே மூச்சில் தொடர்ச்சியாக எப்படி எழுத முடிந்தது என பலர் வியந்து கேட்கின்றனர். பெற்றதுதான் 40 வாரம். அதை என் கருவில் சுமந்தது 50வருடம்.
சமூகம் என்ற பல்கலையில், காலம் என்னை சேர்த்து விட்டிருக்கிறது. ஐம்புலன்களையும் திறந்து வைத்துக் கொண்டு, சலிக்காமல் கற்றுக் கொண்டேயிருக்கிறேன். ஒரு கவிஞன் கதை எழுதும்போது, கலைக்கூறு அதிகமாகிறது.
கவிதைக்குரிய சொற்சிக்கனத்தை, கதைக்கு கவிஞன் கொடுத்துவிடுகிறான். தங்கக் காசுகளைப் போல், இக்கதைகளில் சொற்களை அளந்து செலவு செய்திருக்கிறேன். நீங்கள் ஒரே உடம்பில், ஒரே வாழ்க்கையைத்தான் வாழ்கிறீர்கள். ஆனால், இந்த 40 கதைகளும் ஒரே உடம்பில் உங்களை 40 வாழ்க்கையை வாழச் செய்யும் என நம்புகிறேன்.
நம்பிக்கை கொடுப்பதே நல்ல இலக்கியம். எந்த மலையில் முட்டியபோதும், காற்று நின்றுபோவதில்லை. பாறைகளைக் கண்ட நதி பயணத்தில் உறைந்துபோவதில்லை. எந்த துயரத்திலும், மனித வாழ்க்கை முடிந்துபோவதில்லை. என் கதைகளின் அடிநாதமே மனிதகுலத்தின் நம்பிக்கைதான்.
மலேசியாவில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு போவதும், தமிழ் பள்ளிகளில் தமிழ் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சரிந்து கொண்டுபோவதும் கவலையளிக்கிறது. மொழியை இழந்துவிட்டால், உங்கள் பிள்ளைகள் உறவுகளை இழந்து விடக்கூடும். குழந்தைகளை கட்டாயம் தமிழ் படிக்க விடுங்கள் என்றார்.
விழா ஏற்பாடுகளை எழுத்தாளர் ராஜேந்திரன், டத்தோ சங்கரன், டத்தோ சகாதேவன், கேசவன், தாமசேகரன், தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் மன்னர் மன்னன், பேராசிரியர் கார்த்திகேசு செய்திருந்தனர்.
