புதுக்கப்பிடாத ‘அண்ணா நூற்றாண்டு நூலகம் - யுனெஸ்கோ’ ஒப்பந்தம்
புதுக்கப்பிடாத ‘அண்ணா நூற்றாண்டு நூலகம் - யுனெஸ்கோ’ ஒப்பந்தம்
UPDATED : ஜன 14, 2016 12:00 AM
ADDED : ஜன 14, 2016 02:12 PM
சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ஐ.நா., கல்வி, அறிவியல் மற்றும் கலாசார மையமான, ’யுனெஸ்கோ’வுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த, ’டிஜிட்டல்’ நூலக ஒப்பந்தம் பயன்படுத்தாமலே காலாவதியாகி விட்டது; புதுப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
சென்னை, கோட்டூர்புரத்தில் 178 கோடி ரூபாய் செலவில், அண்ணா நூற்றாண்டு நூலகம், 2010ல் துவங்கப்பட்டது. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகமான இங்கு எட்டு மாடிகளில், பல பிரிவில் நூல்கள் வைக்கப்பட்டு, படிக்க, பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதில், மூன்றாவது மாடியில், உலகில் பெரும்பாலான நாடுகளில் இல்லாத வகையில், டிஜிட்டல் நூலக வசதி உள்ளது. 50 கணினிகள் அமைக்கப்பட்டு மாணவர்கள், ’இ - லேர்னிங்’ எனப்படும், இணைய வழியில் நூல்களை படிக்கலாம். இதற்காக, தமிழக அரசு, 2010ல், ’யுனெஸ்கோ’ எனப்படும், ஐக்கிய நாடுகளின் சமூக, கலாசார அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதாவது, யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் நூலக திட்டத்தின் கீழ், அண்ணா நூலக டிஜிட்டல் நூலகத்தை, இணைய வழியில் இணைத்தால், யுனெஸ்கோவின் உலக புகழ்பெற்ற ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப புத்தகங்களை இலவசமாக படிக்கலாம்.
இந்த ஒப்பந்தத்தால், மருத்துவம், இன்ஜினியரிங் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை, எளிதில், இணைய வழியில் படிக்கவோ, பதிவிறக்கம் செய்யவோ முடியும்.ஆனால், இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது முதல், இது வரை டிஜிட்டல் நூலகம் இயங்கவில்லை. அந்த நூலகம், ஐந்து ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடந்தது. தற்போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, டிஜிட்டல் நூலக கணினிகள் பழுது பார்க்கப்பட்டு, இணைய இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
டிஜிட்டல் நூலக பராமரிப்பு பணி, தமிழக அரசின், ’எல்காட்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரு தினங்களாக நூலகத்தின் கணினிகள் பழுதுபார்க்கப்பட்டு, சோதனை பயன்பாடு நடந்து வருகிறது.
’யுனெஸ்கோ’ உலக டிஜிட்டல் நூலக இணைப்பில், புத்தகங்களை ஆய்வு செய்ய ஊழியர்கள் முயற்சித்தனர். அப்போது தான், டிஜிட்டல் நூலகத்தின் ஒப்பந்தம், மூன்றாண்டுகளுக்கு முன் காலாவதியானது தெரிய வந்தது.
