ஆசிரியர் பங்களிப்பு ஓய்வூதியம் கணக்குகளுக்கு விடிவு
ஆசிரியர் பங்களிப்பு ஓய்வூதியம் கணக்குகளுக்கு விடிவு
UPDATED : ஜன 18, 2016 12:00 AM
ADDED : ஜன 18, 2016 10:46 AM
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் விடுபட்ட, பழைய கணக்குகளுக்கான பல கோடி ரூபாயை, ஆசிரியர்களின் புதிய கணக்கில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிதாக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு, மத்திய அரசில், 2004 முதலும்; தமிழக அரசில், 2003 முதலும், சி.பி.எஸ்., என்ற, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக, 50 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட, ஒரு லட்சம் அரசு ஊழியர்களின் ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இவர்களில், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு, பொது கணக்கு அலுவலகத்திலும்; தொடக்க பள்ளி மற்றும் உள்ளாட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு தகவல் தொகுப்பு மையத்திலும் சி.பி.எஸ்., கணக்கு பராமரிக்கப்பட்டது. அதேநேரம், பதவி உயர்வால், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கு, அவர்களின் பழைய சி.பி.எஸ்., கணக்கு கைவிடப்பட்டு, பொது கணக்கு அலுவலகத்தில் புதிய கணக்கு துவங்கப்பட்டது.
அதனால், பல ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட, பல கோடி ரூபாயின் நிலை என்னவாகும் என, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில், சி.பி.எஸ்., மற்றும் நிரந்தர பென்ஷன் திட்டமான
பி.எப்., ஆகிய, இரண்டு கணக்கு நிர்வாகத்திலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. எனவே,
சி.பி.எஸ்., கணக்குகள், அரசு தகவல் தொகுப்பு மையத்துக்கும்,
பி.எப்., கணக்குகள், பொது கணக்கு அலுவலக நிர்வாகத்துக்கும்
சமீபத்தில் பிரிக்கப்பட்டன. அதனால், ஒரு குழப்பம்
தீர்ந்தது.
ஆனாலும், ஒவ்வொரு ஆசிரியருக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட சி.பி.எஸ்., கணக்குகளால் ஏற்பட்ட குழப்பம் மட்டும் தீரவில்லை. இது குறித்து, ஆசிரியர் சங்கங்கள் சார்பில் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. எனவே, இந்த பிரச்னைக்கு தற்காலிக முடிவு கட்டப்பட்டுள்ளது.
