UPDATED : ஜன 18, 2016 12:00 AM
ADDED : ஜன 18, 2016 10:44 AM
திருவண்ணாமலை
: பொங்கல் விடுமுறை நாளில், மாணவர்களுக்கு
சிறப்பு வகுப்பு நடத்தியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என, கிறிஸ்தவ பள்ளிக்கு நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அவலூர் பேட்டை சாலையில், மவுண்ட் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த, 15ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், பள்ளியில் அன்று, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. விடுமுறை நாளில் எப்படி சிறப்பு வகுப்பு நடத்தலாம்? என, இந்து முன்னணி அமைப்பினர், பள்ளி நிர்வாகத்திடம் கேள்வியெழுப்பி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் மாணவர்கள் உடனடியாக பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் முருகன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் ஆகியோருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, திருவண்ணாமலை டி.ஆர்.ஓ., பழனி, இது குறித்து உரிய விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் முருகனுக்கு உத்தரவிட்டார். அதன்படி, இன்று, (18ம் தேதி) விளக்கம் அளிக்கக் கோரி, அப்பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
