கல்வி சான்றிதழ் முறைகேடு விவகாரம்; குழு மாற்றி அமைப்பு
கல்வி சான்றிதழ் முறைகேடு விவகாரம்; குழு மாற்றி அமைப்பு
UPDATED : ஜன 19, 2016 12:00 AM
ADDED : ஜன 19, 2016 10:56 AM
தர்மபுரி
: கல்வி சான்றிதழ் முறைகேடு குறித்து, சான்றிதழ் சரி பார்க்கும் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, என தர்மபுரி சி.இ.ஓ., மகேஸ்வரி கூறினார்.
போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து, அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்ததாக, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பாரதியார் நகரைச் சேர்ந்த முனியப்பன், 37, கிருஷ்ணகிரி மாவட்டம், கூச்சானூரைச் சேர்ந்த செந்தில்குமார், 38, மற்றும் இவர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த, கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், 42, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்களை கண்டறியும் வகையில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க, தலைமை ஆசிரியர்கள் தலைமையில் குழு அமைத்து, தர்மபுரி சி.இ.ஓ., மகேஸ்வரி உத்தரவிட்டார். கடந்த, 11ம் தேதி முதல், தர்மபுரி சி.இ.ஓ., அலுவலகத்தில் சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடந்து வந்தது. இந்த பணி நேற்று முடிந்தது.
இது குறித்து
சி.இ.ஓ.,
மகேஸ்வரி கூறியதாவது:
போலி கல்வி,
ஜாதி சான்றிதழ் குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள் தலைமையில் கடந்த, 11ம் தேதி முதல் இன்று (நேற்று) வரை, பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 548 பேரின் சான்றிதழ்கள் சரி பார்க்கும் பணி நடந்தது முடிந்தது. இதில்,
இரண்டு ஆசிரியர்களின் சான்றிதழில் சந்தேகம்
ஏற்பட்டுள்ளது. அவற்றின் உண்மை தன்மையை அறிய, சென்னை பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட உள்ளது.
மேலும், அனைத்து பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, மீண்டும் சரி பார்க்கப்பட உள்ளது. அரையாண்டு தேர்வு முடிவு வெளியிடுதல் உட்பட பல்வேறு பணிகள் காரணமாக, நாளை (இன்று முதல்) மாவட்டத்தில் உள்ள, 4,500 இடைநிலை ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி, டி.இ.இ.ஓ., (பொ) ராஜசேகரன் தலைமையிலான குழுவினர் மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
