UPDATED : ஜன 19, 2016 12:00 AM
ADDED : ஜன 19, 2016 10:53 AM
சேந்தமங்கலம்
:
விடுப்பு எடுத்த மாணவர்களை, அரையாண்டு தேர்வில் கலந்து கொள்ள
முடியாமல், தலைமையாசிரியர் வெளியேற்றிய சம்பவம்,
பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்
மாவட்டம், சேந்தமங்கலத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 912 மாணவர்கள் படிக்கின்றனர். எஸ்.எஸ்.எல்.சி.,
பிளஸ் 2 மாணவர்களுக்கு
சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. கடந்த, 14ம் தேதி, போகி பண்டிகை அன்று, பள்ளி வேலை நாளாக செயல்பட்டுள்ளது. அன்றைய தினம், பொதுத்தேர்வு மாணவர்கள், 50க்கும்
மேற்பட்டோர் பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளனர்.
பெற்றோருக்கு
அழைப்பு:
அதனால், சிறப்பு பயிற்சி வகுப்புக்கும்
செல்லவில்லை. அதை தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மூன்று நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று வழக்கம்
போல் பள்ளி துவங்கியது. அப்போது, போகிப்பண்டிகை அன்று பள்ளிக்கும்,
சிறப்பு பயிற்சி வகுப்புக்கும் வராத, பொதுத்தேர்வு மாணவர்களை அழைத்த பள்ளி தலைமையாசிரியர் உதயகுமார், ஏன், கடந்த,
14ம் தேதி, பள்ளிக்கு வரவில்லை; சிறப்பு பயிற்சி வகுப்பிலும்
பங்கேற்கவில்லை. அதனால், உங்கள் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு
தான் பள்ளிக்கு வரவேண்டும் எனக்கூறி, அவர்களை பள்ளியை விட்டு வெளியேற்றினார்.
கெஞ்சியும்
வழியில்லை:
தலைமையாசிரியரின் உத்தரவை கேட்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எவ்வளவோ கெஞ்சியும், தலைமையாசிரியர் இறங்கி வராததால்,
வேறுவழியின்றி தங்கள் பெற்றோர்களை அழைத்து
வருவதற்காக மாணவர்கள், நேற்று காலை, 10 மணிக்கு, பள்ளியை விட்டு வெளியேறி, அவரவர் வீட்டுக்கு சென்றனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை அன்று மாலை தான் வெளியேற்ற வேண்டும்;
எக்காணத்தை கொண்டும் பாதியில்
வெளியேற்றக்கூடாது என, தெரிந்தும், பள்ளி தலைமையாசிரியரின் செயல், பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் கடும் அதிர்ச்சி
அடையச் செய்துள்ளது.
ஆங்கிலம் முதல்
தாள்
தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், நேற்று, எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது.
அதில், சிறப்பு பயிற்சி வகுப்புக்கு வராத மாணவர்கள்
பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து,
மாணவர்கள் கூறியதாவது:
அரை நாள் விடுமுறை
எடுத்ததற்காக தலைமையாசிரியர் எங்களை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. அதனால், அரையாண்டு தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும், எங்கள் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் உதயகுமார் கூறியதாவது:
நான்கு நாட்களாக, தொடர்ந்து காலையில் வரும் மாணவர்கள், மதியம் வகுப்பை, கட் அடித்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதனால், திங்கள்கிழமை (நேற்று) வரும்போது, பெற்றோர்களை அழைத்து வரவேண்டும் என, கூறப்பட்டது. அதில்,ஒரு சிலரை தவிர, 27 பேர் அழைத்து வரவில்லை. அவர்களின் பெற்றோர்களை அழைத்துவரும்படிக் கூறி அனுப்பினேன். 22 பேர் தங்கள் பெற்றோர்களை அழைத்து வந்தனர். ஐந்து பேர் வரவில்லை. தேர்ச்சி சதவீதம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
