குளறுபடிகளுடன் ’செட்’ தேர்வு அறிவிப்பு; பட்டதாரிகள் கலக்கம்
குளறுபடிகளுடன் ’செட்’ தேர்வு அறிவிப்பு; பட்டதாரிகள் கலக்கம்
UPDATED : ஜன 21, 2016 12:00 AM
ADDED : ஜன 21, 2016 04:02 PM
இதில், அறிவிக்கையில் துவங்கி அனைத்து நடவடிக்கைகளும், பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் விதிகளை மீறும் வகையில் உள்ளதால், பட்டதாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கல்லுாரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், நெட் அல்லது மாநில அரசின், செட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், நெட் தேர்வை, கடுமையான கட்டுப்பாடுகள், தரமான வினாத்தாளுடன், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது; செட் தேர்வு, மாநில அரசால் நடத்தப்படுகிறது.
பாரதியார் பல்கலை, 2012ல் நடத்திய, செட் தேர்வுக்கு பின் தற்போது, அன்னை தெரசா பல்கலை மூலம் புதிய, செட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; பிப்., 20ல் தேர்வு நடக்கிறது. ஆனால், பொது அறிவிக்கையில், ஜன., 20ல், அதாவது அறிவிக்கை வெளியான நேற்றே தேர்வு நடத்தப்படுவதாக, தப்பும் தவறுமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும், 15 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு, http:/www.setexam2016.in/ என்ற இணையதளத்தில், ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அறிவிக்கை வெளியான நாள் முதல், ஒரு மாதம் மட்டுமே விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. செட் தேர்வில், விண்ணப்ப முடிவுக்கும் தேர்வுக்கும் இடையில், 10 நாட்களே அவகாசம் உள்ளது.
யு.ஜி.சி., விதிப்படி, பல்கலை துணைவேந்தர் தான், தேர்வுக் குழுவின் தலைவராக இருக்க வேண்டும். ஆனால், தெரசா பல்கலையில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளதால், நிர்வாக பொறுப்பிலுள்ள பதிவாளரும், அரசு அதிகாரியான உயர்கல்வி முதன்மை செயலரும் குழுவில் உள்ளனர். இதனால், அரசு அதிகாரிகளின் தலையீடு அதிகரித்து, தேர்வு முடிவுகள் சந்தேகத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என, தேர்வர்கள் குமுறுகின்றனர்.
பதிவாளர் மீது விசாரணையா? தேர்வு அறிவிக்கையில் தேதி தவறாக அச்சிடப்பட்டது குறித்து, உயர்கல்வி துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. பல்கலை பதிவாளர், பைலை தயார் செய்து, பல அலுவலக பிரிவுகளை தாண்டி, தலைமை செயலகத்தில் உள்ள உயர்கல்வி துறை முதன்மை செயலருக்கு சென்றுள்ளது. அவரும் தவறை கண்டுபிடிக்காமல் கையெழுத்திட்டு, அறிவிக்கையை வெளியிட ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து, உயர்கல்வித் துறையில் விசாரணை துவங்கி உள்ளது. பதிவாளர் அல்லது அவரது அலுவலக ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
தரமான தேர்வு வேண்டும்:
தேர்வர்கள் படிக்கவும், விண்ணப்பிக்கவும் போதிய அவகாசம் தரவில்லை. தேர்வை, அவசர கோலமாக அறிவித்து நடத்துவதால் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அறிவிக்கையிலேயே பல பிழைகள் உள்ளன. எனவே, தேர்வை எப்படி முறைப்படி நடத்த முடியும். இதுகுறித்து உரிய முடிவெடுத்து, துணைவேந்தர் நியமனம் செய்த பின், விதிகளை பின்பற்றி தேர்வை அறிவித்து, சி.பி.எஸ்.இ., போன்று தரமான தேர்வாக நடத்த வேண்டும். நாகராஜன் - தமிழ்நாடு, நெட், ஸ்லெட் தேர்வு சங்க பொதுச் செயலர்
