UPDATED : மார் 17, 2016 12:00 AM
ADDED : மார் 17, 2016 10:44 AM
சேலம்:
கடந்த, 2012-13ம் ஆண்டில், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி
ஆசிரியர்களுக்கு, தொடர் நீட்டிப்பு ஆணை
வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, சம்பளம் கிடைக்காமல் அவதிப்பட்ட பிரச்சனைக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த, 2012- 13ம் ஆண்டில், 100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. இதில், ஒரு பள்ளிக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் என, 9 புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டு, 900 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான பணி நீட்டிப்பு ஆணை, கடந்த, 2015, டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது.
இதனால், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாத சம்பளம் பெற முடியாமல், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா வெளியிட்டுள்ள இந்த ஆணையில், ஐந்தாண்டு தொடர் நீட்டிப்பு ஆணைக்கு தமிழக அரசை கோரியுள்ளதாகவும், அதற்கு முன், தற்காலிகமாக ஓராண்டு பணிநீட்டிப்பு ஆணை வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், கடந்த மூன்று மாதங்களாக நிலவி வந்த ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
