UPDATED : மார் 17, 2016 12:00 AM
ADDED : மார் 17, 2016 10:45 AM
சேலம்:
வாக்காளர் பட்டியலில் மாணவர்களை சேர்க்க,
கல்லூரி நிர்வாகத்தினர் முன்வரவேண்டும்.
அவர்களிடம் படிவங்களை கொடுத்து, சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலகத்தில் வழங்க செய்ய வேண்டும் என, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கடந்த ஜனவரில 20ம்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 தொகுதியிலும், பெயர் சேர்க்கைக்கான பணி நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்களை பட்டியலில் சேர்க்கும் பொருட்டு, தேர்தல் ஆணையம் புதிய முயற்சி மேற்கொண்டது.
அரசு மற்றும் தனியார் கல்லூரிக்கு, சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நேரடியாக சென்று, மாணவர்களிடம் கலந்து பேசி, 18 வயது நிரம்பியவர்களை கண்டறிந்து, அவர்களிடம் படிவங்களை கொடுத்து பூர்த்தி செய்து வாங்க அறிவுறுத்தியது. வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால், அந்த மாவட்டத்துக்கு, சம்மந்தப்பட்ட மாணவரின் படிவம் அனுப்பி வைக்கவும், கல்லூரியிலேயே ஆன்லைன் மூலமாக வாக்காளர் பெயர் சேர்க்கும் பணியும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.
75க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் அந்த பணி நடந்தது. விடுபட்டுள்ளவர்களை பட்டியலில் சேர்ப்பதற்காக, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி தாளாளர்கள், முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
டி.ஆர்.ஓ., சுகுமார் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 18 வயது நிரம்பிய மாணவர்களை, பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை, கல்லூரி நிர்வாகம் செய்வதற்கு முன்வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
