UPDATED : ஜூலை 24, 2009 12:00 AM
ADDED : ஜூலை 24, 2009 12:50 PM
ஆண்டுதோறும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் நடைமுறைகளை, ஒரு மாதம் முன்னதாக முடிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் முன், அங்கு தேவையான ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என, இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,) ஆய்வு நடத்துகிறது. எம்.சி.ஐ., பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு, புது மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குகிறது. சில ஆண்டுகளாக, ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி வரை 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு ஆய்வு நடத்த வேண்டியுள்ளது.
விடுமுறைக் காலமான அந்த நேரத்தில் ஆய்விற்கு செல்ல துணைவேந்தர்கள், மருத்துவக் கல்வி இயக்குனர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களை நியமிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இதனால், மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் நடைமுறைகளை மாற்றியமைக்க எம்.சி.ஐ., செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கு ஆகஸ்ட் 1 முதல் 31ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசின் பரிசீலனைக்கு பிறகு இந்த விண்ணப்பங்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் எம்.சி.ஐ.,க்கு அனுப்பப்படும். புது மருத்துவக் கல்லூரிக்கான விண்ணப்பங்களை சரிபார்த்து முன் அனுமதி கடிதம் வழங்கப்படும். அதன் பிறகு எம்.சி.ஐ., ஆய்வு நடத்தப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளுக்கு இறுதி அனுமதி வழங்கப்படும்.
புது மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கும் நடைமுறையில் ஒவ்வொரு பகுதிக்கு, குறிப்பிட்ட கடைசி நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, புது மருத்துவக் கல்லூரிக்கு முன் அனுமதி கடிதம் வழங்குமாறு மத்திய அரசுக்கு எம்.சி.ஐ., பரிந்துரைக்க டிசம்பர் 31ம் தேதி, மத்திய அரசு முன் அனுமதி கடிதத்தை வழங்க ஜனவரி 31ம் தேதி, இறுதி அனுமதிக்காக, கல்லூரிகள் மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28ம் தேதி, அக்கடிதம் மத்திய அரசிடமிருந்து எம்.சி.ஐ.,க்கு வர மார்ச் 15ம் தேதி, இறுதி அனுமதி கடிதம் வழங்க மத்திய அரசுக்கு எம்.சி.ஐ., பரிந்துரைக்க ஜூன் 15ம் தேதி, மத்திய அரசு இறுதி அனுமதி கடிதம் வழங்க ஜூலை 15ம் தேதி கடைசி நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
புதிய முடிவின்படி, புது மருத்துவக் கல்லூரிக்கு முன் அனுமதி கடிதம் வழங்குமாறு மத்திய அரசுக்கு எம்.சி.ஐ., பரிந்துரைக்க டிசம்பர் 15ம் தேதி, மத்திய அரசு முன் அனுமதி கடிதத்தை வழங்க ஜனவரி 15ம் தேதி, இறுதி அனுமதிக்காக, கல்லூரிகள் மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 15ம் தேதி, அக்கடிதம் மத்திய அரசிடமிருந்து எம்.சி.ஐ.,க்கு வர மார்ச் 1ம் தேதி, இறுதி அனுமதி கடிதம் வழங்க மத்திய அரசுக்கு எம்.சி.ஐ., பரிந்துரைக்க மே 15ம் தேதி, மத்திய அரசு இறுதி அனுமதி கடிதம் வழங்க ஜூன் 15ம் தேதி கடைசி நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
